கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க போறாங்களா! மாருதி கார்களின் விலை நம்ப முடியாத அளவிற்கு குறைய போகுது!..
மாருதி கார் மட்டுமில்லைங்க இன்னும் பல நிறுவனங்களின் கார்களின் விலை குறைய இருக்கின்றது. இதற்கான ஆரம்ப புள்ளியையே வைத்திருக்கின்றார் மத்திய அமைச்சர். இதன் விளைவாகவே ஒரு சில கார்களின் விலை குறையும் சூழல் உருவாகி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவை மைலேஜ் வழங்குவதில் மிக சிறந்தது. அதேநேரத்தில் மாசையும் சற்று குறைவாகவே வெளியேற்றும். இதனால்தான் இந்தியர்கள் பலர் இந்த காரை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வசதிக் கொண்டதே ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரண்டு விதமான தேர்வுகளில் ஹைபிரிட் வகை கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வாகனங்களின் விலையையே குறையும் சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது. சமீபத்தில் நியூஸ்18-இன் ரைசிங் பாரத் மாநாடு 2024 நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க அவர் பரிந்துரைத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். இப்போதைய நிலவரப்படி ஹைபிரிட் கார்களுக்கு 48 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரியாக வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இதை 12 சதவீதமாக குறைக்கவே மத்திய அமைச்சர் பரிந்துரைத்திருக்கின்றார். எனவே, இந்தியாவில் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல்களின் விலை மிகப் பெரிய அளவில் குறையும் சூழல் உருவாகி இருக்கின்றது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பரிந்துரை ஹைபிரிட் கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்தியா பலகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச் சலுகை மற்றும் மானியம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகவே சற்று குறைவான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதற்கு ஃபேம்2 மானியம் திட்டமே காரணமாக இருக்கின்றது. இந்த திட்டம் நடப்பு மார்ச் மாதம் 31 ஆம் தேதி உடன் நிறைவடைய இருக்கின்றது. எனவே, இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த முறை இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு என தனித் திட்டம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு 5 சதவீதமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே பகுதியாக மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் கார்களுக்கு 48 சதவீத ஜிஎஸ்டி வரியை வசூலிக்கப்படுகின்றது.
இந்த முரண்பாட்டை களையும் முயற்சியாகவே வரியை குறைப்பதற்கான முன்மொழிவை வைத்திருக்கின்றார் நிதின் கட்கரி. ஆகையால், வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஆட்டோமொபைல்ஸ் துறை இருக்கின்றது. இதில் அதிகப்படியான வருவாய் கிடைத்துக் கொண்டிருப்பதே இதற்கான காரணம் ஆகும்.
இப்போதைய நிலவரப்படி, இந்தியாவில் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன், ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda e:HEV), டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross), ஹைரைடர் (Hyryder), மாருதி கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara), இன்விக்டோ (Invicto) என ஏகப்பட்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு ஹைபிரிட் வாகனங்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைக்கும் எனில் இந்த கார் மாடல்களின் விலையும் நம்ப முடியாத அளவிற்கு குறைய நேரிடும். எனவே தற்போது பணம் படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாக இருக்கும் ஹைபிரிட் கார்களை நடுத்தர மக்களாலும் வாங்கி பயனடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








