இந்த கார் மட்டும் இந்தியா வந்துச்சு சந்தையே ஒரு வழியாகிடும்.. என்னது ஜெனசிஸ் பிராண்டு இந்தியா வரபோகுதா?
தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) ஓர் மிக சிறந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த பிராண்டு இந்தியாவில் வேண்டுமானால் வழக்கமான மற்றும் விலை குறைவான கார்களுக்கு பெயர்போன ஒன்றாக இருக்கலாம். ஆனால், உலக சந்தையில் இந்த நிறுவனம் சொகுசு கார்களுக்கும் பெயர் போனதாக இருக்கின்றது. அது ஜெனசிஸ் எனும் பிராண்டின் கீழ் ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அதிக லக்சூரி அம்சங்கள் நிறைந்த காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஜெனசிஸ் எனும் பிராண்டின்கீழே சொகுசு கார்களின் விற்பனையை ஹூண்டாய் மேற்கொண்டு வருகின்றது. இந்த பிராண்டையே ஹூண்டாய் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெனசிஸ் பிராண்டின் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த கார் மாடல் ஒன்றிற்கு ஹூண்டாய் நாட்டில் பேடண்ட் பதிவைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டின் இறுதியிலேயே இதற்கான பதிவுகள் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இப்போதே அதுபற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. மேலும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜெனசிஸ் ஜிவி80 (Genesis GV80) காருக்கான பேடண்ட் உரிமத்தையே ஹூண்டாய் இந்தியாவில் பெற்றிருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.
அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த மற்றும் அதிக கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட ஓர் தரமான தயாரிப்பே இதுவாகும். இந்த கார் உலக சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) ஆகிய கார் மாடல்களுக்கு மிக சிறந்த போட்டியாளனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய ஓர் சிறப்புமிக்க கார் மாடலையே இந்தியாவில் ஹூண்டாய் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது அதன் செயலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஜிவி80 ஓர் சொகுசு எஸ்யூவி ரக கார் மாடலாகும். உலக அளவில் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
சொல்லப் போனால் உலக நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த காரையே பயன்படுத்தி வருகின்றனர். தென்கொரியாவிற்கான இந்திய அம்பாசிடர்கூட இந்த ஆடம்பர காரையே பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காருக்கு அவர் இந்து மத முறைப்படி பூஜை செய்து தன்னுடைய பயன்பாட்டில் இணைத்துக் கொண்ட சம்பவம் பெரும் வைரலாகியதும் குறிப்பிடத்தகுந்தது.
இவரைப் போல இன்னும் பல முக்கியமான பிரமுகர்கள் இந்த காரை உலக நாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இதுவே ஜெனசிஸ் பிராண்டின்கீழ் தயாரிக்கப்பட்ட முதல் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஹூண்டாயின் எம்3 பிளாட்பாரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டதே இந்த கார் மாடல்.
உலக சந்தையில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 297 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 2.5 லிட்டர், இன்-லைன் 4, டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 371 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட 3.5 லிட்டர் ட்வின் டர்போ வி6 பெட்ரோல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன.
இத்துடன் மூன்றாவதாக 3.0 லிட்டர் இன்லைன் 6 மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 271 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இ-எல்எஸ்டி (eLSD) மற்றும் ஏடபிள்யூடி (AWD) வசதிகளையும் இந்த மோட்டார் ஆப்ஷனில் நம்மால் பார்க்க முடியும். ஹூண்டாய் நிறுவனம் இந்த மூன்று மோட்டார் ஆப்ஷன்களையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவது சந்தேகமே.
ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு மோட்டார் ஆப்ஷன்களேக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெனசிஸ் ஜிவி80-இல் வழங்கப்படும் மோட்டார் ஆப்ஷன்களை வைத்து பார்க்கையில் அதிக கவர்ச்சியான கார் மாடல் மட்டுமல்ல அதீத ஆற்றலை வெளியேற்றும் கார் மாடலும்கூட என்பது தெரிய வருகின்றது.
இதேபோல் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சொகுசு அம்சங்களிலும் இந்த கார் வாகன காதலர்களை மிரட்டிவிடும் வகையில் உள்ளது. அந்தவகையில், 14.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரல் கட்டளை, ஏஐ வசதிக் கொண்ட கேமிரா, பன்முக கன்ட்ரோல்கள் என ஏகப்பட்ட வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, இந்த காரில் கூடுதல் சொகுசு டிராவலை வழங்கும் பொருட்டு அதிக மிருதுவான இருக்கைகள், விரைந்து கேபினை குளிரூட்டக் கூடிய ஏசி சிஸ்டம் மற்றும் 18 ஸ்பீக்கர்களைக் கொணட் லெக்சிகான் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றையும் வழங்கி இருக்கின்றனர். இதேபோல், பாதுகாப்பு அம்சங்களையும் மிக மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், மிக முக்கியமான தொழில்நுட்பமான அடாஸ் (ADAS) வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக தடைகளைத் தவிர்ப்பது, வெள்ளை கோட்டை தாண்டி போகாமல் ஒரே லேனுக்குள் பயணிப்பதற்கான வழிக்காட்டுதல்களை பெறுவது, டிராஃபிக் உதவி, பிளைண்ட் ஸ்பாட் கண்கானிப்பு, ஓட்டுனரை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, நெடுஞ்சாலைகளில் உள்ள சரிவுகள், வளைவுகள் மற்றும் ஸ்பீடு ஜோன்களைக் கண்டறிந்து அதற்கேற்ப பயணிக்கவும் இந்த அம்சம் அட்வைஸ் செய்யும். இத்தகைய தரமான கார் மாடலே ஜெனசிஸ் ஜிவி80 ஆகும். இதில், கூடுதல் பாதுகாப்பு அமைப்பாக, 10 ஏர்பேக்குகள், புத்திசாலித்தனமாக இயங்கும் வசதிக் கொண்ட முன் விளக்கு உள்ளிட்டவையும் ஜிவி80 காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜெனசிஸ் ஜிவி80 இந்த காருக்கு தென் கொரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே இந்தியாவில் களமிறக்குவதற்கான பணியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது. ஆனால், இது விற்பனைக்கு வரும் என்கிற துள்ளியமான நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டை ஒரு கை பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கேற்பவே தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் ஆடம்பரம் என அனைத்திலும் உச்சத்தைத் தொடக் கூடிய கார் மாடலாக ஜெனசிஸ் ஜிவி80 எஸ்யூவி காட்சியளிக்கின்றது. இந்த காருக்கு நிச்சயம் இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவற்புக் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








