இதுக்காகவே ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்களை நம்பி வாங்கலாம்... காரை நேரா இங்கே கொண்டு போங்க!!
மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டுமெனில், சார்ஜிங் வசதிகளை நாடு முழுவதும் கொண்டுவருவது அவசியமான ஒன்றாகும். ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள முக்கியமான குறையாக பலர் கூறுவது என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனங்களை நீண்ட தொலைவிற்கு கொண்டு செல்ல முடிவதில்லை என்பதாகும். ஆதலால், பெட்ரோல் பங்குகளை போன்று குறிப்பிட்ட தொலைவிற்கு இடையே ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டுவர வேண்டியது கட்டாயமாகும். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள ஹூண்டாய் நிறுவனம் அதிரடியாக ஓர் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. நம் நாட்டில் எலக்ட்ரிக் காரை பல வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்திய பெருமையும் ஹூண்டாய் நிறுவனத்தையே சேரும். கோனா இவி என்கிற எலக்ட்ரிக் காரை 2019ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஹூண்டாய் கோனா இவி தற்போது விற்பனையில் இல்லையென்றாலும், ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போதைக்கு ஐயோனிக் 5 என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்துவரும் ஹூண்டாய், அதன் டீலர்ஷிப் ஷோரூம்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக 'சார்ஜ் ஸோன்' (Charge Zone) என்கிற நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
இந்த கூட்டணியின்படி, இந்தியாவில் உள்ள 100 ஹூண்டாய் டீலர்ஷிப் மையங்களில் 60 கிலோவாட்ஸ் DC ஃபாஸ்ட் சார்ஜர்களை சார்ஜ் ஸோன் நிறுவனம் நிறுவ உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்தியாவிற்கான ஹூண்டாய் நிறுவனத்தின் தனியார் திட்டமிடல் பிரிவின் முதன்மை அதிகாரி ஜே வான் ரியு-வுக்கும், சார்ஜ் ஸோன் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்திகே ஹரியானிக்கும் இடையே ஹரியானா மாநிலம், குருக்கிராமில் கையெழுத்தாகி உள்ளது.

இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம், இந்தியாவில் இவி சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுப்படுத்துவதாகும். அதன் மூலமாக, எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை எளிதாகவும், விரைவாகவும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பதாகும். இதற்காக, இந்தியாவில் 100 ஹூண்டாய் டீலர்ஷிப் ஷோரூம்கள் நகரத்திற்குள்ளேயும், நெடுஞ்சாலைகளிலும் தேர்வு செய்யப்பட உள்ளன.
தற்போதைக்கு, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திடம் 60 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் மொத்தம் 19 டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. தற்போது, சார்ஜ் ஸோன் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பதன் மூலம், இந்த எண்ணிக்கையை 119ஆக ஹூண்டாய் உயர்த்தவுள்ளது. சார்ஜ் ஸோன் நிறுவனம் ஹூண்டாய் டீலர்ஷிப் ஷோரூம்களில் நிறுவவுள்ள இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை இவி ஓனர்கள் 24x7 பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிற்காக திட்டமிட்டுள்ள இவி சார்ஜிங் திட்டங்களில் ஒருபகுதியே சார்ஜ் ஸோன் நிறுவனத்துடனான இந்த கூட்டணி ஆகும். ஏனெனில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 180 கிலோவாட்ஸ் டிசி மற்றும் 60 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை நிறுவ ஹூண்டாய் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. கார்கள் விற்பனை செய்யப்படும் டீலர்ஷிப் ஷோரூமின் வளாகத்திற்குள் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவுவதே ஹூண்டாயின் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஆனால் அதேநேரம், இந்தியாவின் 9 மாநிலங்களில் 15 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நகரத்தின் முக்கியமான இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் ஹூண்டாய் கொண்டுள்ளது. மேலும், எலக்ட்ரிக் கார் உரிமையாளர்களுக்காக 'மை ஹூண்டாய்' என்கிற மொபைல் செயலியையும் ஹூண்டாய் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த மொபைல் போன் செயலி வாயிலாக, இவி உரிமையாளர்கள் மற்ற நிறுவனங்களின் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை ஹூண்டாய் அதிகரிப்பதில் இருந்து, இந்த நிறுவனம் இந்தியாவில் விரைவில் புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதை அறிய முடிகிறது. இருப்பினும், சார்ஜ் ஸோன் நிறுவனத்தின் ஃபாஸ்ட் சார்ஜர்கள் 100 டீலர்ஷிப் ஷோரூம்களில் மட்டுமே நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 என்பது குறைவான எண்ணிக்கையே. இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் டீலர்ஷிப் ஷோரூம்களை ஹூண்டாய் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








