டாடா பஞ்ச் கொஞ்சம் ஓரமா போ.. 2 சிஎன்ஜி சிலிண்டர்களுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் அறிமுகம்.. இவ்ளோ மைலேஜ் தருமா!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), தன்னுடைய சிஎன்ஜி (CNG)-யில் இயங்கும் கார் மாடலான எக்ஸ்டர் சிஎன்ஜி (Exter CNG)-இன் பக்கம் இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஓர் தரமான சம்பவத்தைச் செய்திருக்கின்றது. இந்த சிஎன்ஜி கார் மாடலில் இரண்டு சிலிண்டர்கள் வசதியையே அது தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது. முன்னதாக, ஒரே ஒரு சிலிண்டர் மட்டும், மிகப் பெரிய உருவத்தில் வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இரண்டு சிறிய சிலிண்டர்களாக அவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக பூட் ஸ்பேஸ் சற்றே அதிகரித்து இருக்கின்றது.
எனவே, எக்ஸ்டர் காரின் பின்னால் அதிக பொருட்களை (லக்கேஜ்களை) எடுத்துச் செல்வதற்கான சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது. இந்தியாவிற்கு இரண்டு சிஎன்ஜி சிலிண்டர் வசதியை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வைத்ததே டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையே தற்போது ஹூண்டாய் நிறுவனமும் கையில் எடுத்திருக்கின்றது.

இதன்வாயிலாக, டாடா மோட்டார்ஸின் ஐடியாவை வைத்து, டாடாவிற்கே போட்டியளிக்க இருக்கின்றது ஹூண்டாய். டாடா பஞ்ச் (Tata Punch) காருக்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே எக்ஸ்டர் ஆகும். டாடா பஞ்ச் இந்திய சந்தையில் பெட்ரோல், பெட்ரோல்-சிஎன்ஜி (Bi-Fuel) மற்றும் எலெக்ட்ரிக் (EV) ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய வாகனத்திற்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே எக்ஸ்டர் கார் மாடலில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, விரைவில் இந்த கார் மாடலில் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளையும் ஹூண்டாய் மேற்கொண்டு வருகின்றது. சமீபத்திலேயே இன்ஸ்டர் இவி எனும் பெயரில் அந்த காரை உலக சந்தையில் களமிறக்கியது.
இது இந்தியாவில் எக்ஸ்டர் இவி எனும் பெயரில் விற்பனைக்கு வரவிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே எக்ஸ்டர் சிஎன்ஜியில் இரண்டு சிலிண்டர் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எஸ் (S), எக்ஸ் (X) மற்றும் நைட் எடிசன் (Knight Edition) ஆகிய மூன்று தேர்வுகளில் எக்ஸ்டர் சிஎன்ஜி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதன் ஆரம்ப விலை ரூ. 8.50 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 9.38 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், நைட் எடிசன் என்பது சிறப்பு பதிப்பு ஆகும். எக்ஸ்டர் கார் மாடலின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதே இந்த பதிப்பாகும்.
வழக்கமான எக்ஸ்டர் கார் மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான நிறம், சிறப்பு அணிகலன் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பதிப்பே எக்ஸ்டர் நைட் எடிசன் ஆகும். இரட்டை சிஎன்ஜி சிலிண்டரைத் தொடர்ந்து எக்ஸ்டர் காரில் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது பெட்ரோலில் இருந்து சிஎன்ஜி-க்கும், சிஎன்ஜியில் இருந்து பெட்ரோலுக்கும் மாறும்போது ஸ்மூத்தான மாற்றத்தை வழங்க உதவியாக இருக்கும்.
ஏற்கனவே இந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலியே இந்த கார் மாடலில் சிறப்பு பதிப்பு, இரட்டை சிலிண்டர் செட்-அப் என வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வேலைகளை ஹூண்டாய் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த காரின் விற்பனை இன்னும் பலமடங்கு அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மாடலின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இந்த இரண்டு ஆப்ஷன்களிலும் 1.2 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் சிஎன்ஜியில் இயங்கும்போது அதிகபட்ச மைலேஜாக 27.1 கிமீ வரை வழங்கும். அதேவேளையில், பெட்ரோலில் இயங்கும்போது லிட்டர் ஒன்றிற்கு 19.2 கிமீ தொடங்கி 19.4 கிமீ வரையில் அது மைலேஜ் தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எக்ஸ்டர் கார் சமீபத்திலேயே 93 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையை எட்டியது. விற்பனைக்கு வந்து சராசரியாக ஓராண்டே ஆகின்ற நிலையில், அதற்குள்ளாகவே இந்த அளவிற்கு அதிக விற்பனை எண்ணிக்கையை அது எட்டியது. இந்த விற்பனை எண்ணிக்கை வாயிலாக எக்ஸ்டர் மிகக் கடுமையான சவாலை பஞ்ச் கார் மாடலுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








