பெட்ரோல் போடுற மாதிரி அதி-வேகமாக எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்யலாம்! சென்னையின் முதல் அதி-வேக சார்ஜிங் மையம்!
எலெக்ட்ரிக் வாகனங்களில் பலர் பார்க்கும் மிகப் பெரிய குறையாக அவை முழுமையாக சார்ஜாக மிக அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதே ஆகும். இதனால்தான் இப்போதும் இந்தியர்கள் பலர் பெட்ரோல், டீசல் கார்களைக் கொண்டிருக்கின்றனர். சில நிமிடங்களில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு நம்முடைய அடுத்த வேலையை பார்க்க போய்விடலாம்.
இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோல், டீசல் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவதைப் போலவே மின்சார வாகனங்களையும் அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று. முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் 180 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தையே உருவாக்கி இருக்கின்றது.

சென்னையிலேயே அது இந்த சார்ஜிங் மையத்தை அமைத்துள்ளது. இதுவே நிறுவனம் சென்னையில் அமைக்கும் முதல் 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் ஆகும். இது 150 kW மற்றும் 30 kW கன்னெக்டர்களையும் உள்ளடக்கியது என கூறப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 100க்கும் அதிகமான அதி வேக மின்வாகன மையத்தை உருவாக்குவதை ஹூண்டாய் நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
இதற்கான ஆரம்ப புள்ளியாகவே தற்போது அதன் முதல் 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தை சென்னையில் அமைத்திருக்கின்றது. சென்னையின் ஷாப்பிங் மால்களில் ஒன்றான ஸ்பென்சர் பிளாசாவிலேயே ஹூண்டாயின் அதி வேக மின்வாகன சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மையத்தில் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களாலும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பாக, அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். நிறுவனம் இந்த சார்ஜிங் மையத்தைக் கண்டறிவதற்கான வசதிகளை மை ஹூண்டாய் செயலியில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அத்துடன், ப்ரீ-புக்கிங் செய்யும் வசதியையும் இந்த செயலியில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதுதவிர பணத்தையும் இந்த செயலி வாயிலாகவே செலுத்திக் கொள்ள முடியும்.
இந்த செயலியை ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் பயனர்கள் மட்டுமல்ல மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டாளர்களாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கோனா இவி எனும் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இத்துடன், அதிக சொகுசு வசதிகள் நிறைந்த ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரையும் இது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே ஹூண்டாய் பிராண்டின்கீழ் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு சொகுசு கார் விரும்பிகள் மத்தியில் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பல்வேறு விருதுகளை வென்ற கார் மாடலாகவும் இது காட்சயளிக்கின்றது. உலகின் சிறந்த கார் என்கிற புகழ்பெற்ற விருதையும் இந்த கார் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் 72.6 kWh லிக்யூடு கூல்டு லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆப்ஷனிலேயே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிமீ முதல் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 11 kW தொடங்கி 350 kW வரையிலான சார்ஜிங் மையங்களில்கூட இந்த காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
350 kW ஃபாஸ்ட் சார்ஜிங் பாயின்டை பயன்படுத்தி சார்ஜ் செய்தால் வெறும் 18 நிமிடங்களில் தேவையான அளவு இந்த கார் சார்ஜாகிவிடும். அதேவேளையில், 11 kW சார்ஜிங் கருவியை பயன்படுத்தினால் முழு சார்ஜை எட்ட 7 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.
இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ. 46.05 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 39.2 kWh பேட்டரி பேக்கே ஹூண்டாய் கோனா இவி-யில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 452 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த கார் ரூ. 25.30 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டே ஹூண்டாய் நிறுவனம் அதன் அதி-வேக சார்ஜிங் மையத்தை சென்னையில் முதல் முறையாக கட்டமைத்திருக்கின்றது. விரைவில் தமிழகம் முழுவதும் இம்மாதிரியான சார்ஜிங் மையங்களையே ஹூண்டாய் நிறுவனம் உருவாக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அது சார்ஜிங் மையங்களை வரும் நாட்களில் அமைக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








