மின்சார காரை இனி தயங்கி தயங்கி வாங்க வேண்டாம்! ஒன்றல்ல.. ரெண்டல்ல.. 600 மையங்கள நாடு முழுக்க அமைக்க போறாங்க!
இந்தியாவில் மின்சார வாகனங்கள் முன்பைவிட இப்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அவற்றின் இருப்பு மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இ-வாகனங்களின் இந்த நிலைக்கு கடந்த காலங்களில் அதன் விலையே முக்கிய காரணமாக கூறப்பட்டது. ஆனால், இப்போது விலையை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடுபிடித்துக் காணப்படுகின்றது. இருப்பினும், மின்சார வாகனங்களை வாங்க ஒரு சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.
இதற்கு சார்ஜிங் மையங்களின் பற்றாக் குறையே மிக முக்கியமான காரணமாக உள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதிலும், நகரங்களின் முக்கிய பகுதிகளில் மட்டுமே சார்ஜிங் பாயிண்டுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அவை அனைத்தும் அதி வேகத்தில் சார்ஜ் செய்யக் கூடியவை அல்ல, சற்று குறைவான வேகத்தில் சார்ஜ் செய்யக் கூடியவையாகவே அவை இருக்கின்றன.

இதனால்தான், பலர் இப்போதும் மின்சார வாகனத்தை வாங்க தயக்கம் தெரிவிக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக 600 சார்ஜிங் மையங்களை அது பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளது. அனைத்தும் ஃபாஸ்ட் சார்ஜிங் (அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்ட) மையங்கள் என கூறப்படுகின்றது. மேலும், இந்த சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் மின்சார கார் உரிமையாளர்கள் மட்டுமல்ல பிற பிராண்டுகளின் மின்சார கார் உரிமையாளர்களும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
ஆகையால், ஹூண்டாயின் இந்த சார்ஜிங் மையங்கள் மின்சார கார் உரிமையாளர்களுக்கு ஓர் வரப்பிராசதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் காரின் விற்பனையையும் இதன் வாயிலாக அதிகரிக்க திட்டமிட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி, அந்நிறுவனம் ஐயோனிக் 5 எனும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இது ஓர் காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதனால்தான் இந்த காருக்கு டிமாண்ட் சற்று குறைவாக உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே 22 யூனிட்டுகள் மட்டுமே இந்த கார் மாடல் விற்பனையாகியது. இந்த அளவிற்கே மந்தமான நிலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விற்பனை உள்ளது.
இதன் விற்பனையை அதிகரிக்கச் செய்வதும், வரும் நாட்களில் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் புதுமுக மின்சார கார் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்க செய்யும் நோக்கமாகவும் அது நாடு முழுக்க 600 மின்சார சார்ஜிங் மையங்களை உருவாக்க இருக்கின்றது. நிறுவனம் அடுத்ததாக அதன் கிரெட்டா கார் மாடலின் மின்சார வெர்ஷனையே நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் அறிமுகம் வருகின்ற 2025 ஆம் ஆண்டி ஜனவரியில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் மற்ற நிறுவனங்களின் மின்சார கார்கள் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே கிரெட்டா இவியின் விற்பனைக்கு பக்க பலமாக இருக்கும் பொருட்டு ஹூண்டாய் நாடு முழுக்க மின்சார சார்ஜிங் மையங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வாகனங்களை விரைந்து சார்ஜ் செய்யும் வசதிக் கொண்ட சார்ஜிங் மையங்களை நாடு முழுக்க உருவாக்க உள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் 600 மையங்களையும் அது பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








