மாருதியின் இடத்தை பிடிக்க முயற்சிக்கும் ஹூண்டாய்.. இதுக்காக அது செய்ய போற வேலையை பாத்தீங்களா!
மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக ஃப்ரான்க்ஸ் (Fronx) கார் மாடல் மாறி இருக்கின்றது. இது ஓர் கிராஸோவர் வகை எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரை தனது பிரீமியம் அம்சங்கள் நிறைந்த பலினோ (Baleno) எனும் ஹேட்ச்பேக் ரக கார் மாடலை தழுவியே மாருதி சுஸுகி தயார் செய்திருக்கின்றது. இதற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் (அதிகம் விற்பனையாகும்) கார் மாடல்களில் ஒன்றாக தற்போது ஃப்ரான்க்ஸ் மாறி இருக்கின்றது.
இதன் இடத்தைப் பிடிக்கும் முயற்சியிலேயே தற்போது ஹூண்டாய் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாங்க, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்-க்கு போட்டி அளிக்கும் விதமாக ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் ஓர் புதுமுக கிராஸோவர் ரக காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதுகுறித்து ஆட்டோகார் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஹூண்டாய் நிறுவனம், உலக அளவில் பேயோன் (Bayon) என்கிற பெயரில் விற்பனைச் செய்து வரும் கார் மாடலையே இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. வெகுவிரைவிலேயே, இந்த கார் இந்தியாவிற்கு ஏற்ப மாற்றங்களைப் பெற்ற நிலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அது தெரிவித்து இருக்கின்றது.
ஆனால், இந்த கார் மாடல் 2027 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன. இதையே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் நிறுவனம், இந்த பேயோன் கார் மாடலை தனது புகழ்பெற்ற புதிய தலைமுறை ஐ20 (i20) காரை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே தயாரித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்போது புதிய பெயரிலேயே விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. இப்போது வரை அந்த காரை நிறுவனம் பிசி4ஐ (Bc4i) எனும் குறிப்பெயரிலேயே குறிப்பிட்டு வருகின்றது. இந்த கார் நாட்டில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மாடலுக்கு மிகப் பெரிய போட்டியான சூழல் உருவாகும்.
அதற்கு மட்டுமல்ல டொயோட்டா டெய்சர் மற்றும் டாடா நெக்ஸான் போன்ற கார் மாடல்களுக்கும் மிகப் பெரிய போட்டியாக அதன் வருகை அமையும். இந்த போட்டியை மேலும் சவாலானதாக மாற்றும் பொருட்டு அதற்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விலைக்கு ஏற்ப அதிக பிரீமியம் அம்சங்கள் தாங்கிய கார் மாடலாகவே இந்தியாவிற்கான பேயோன் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் வைத்தே இந்த காரும் தயாரிக்கப்பட இருக்கின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு விபரமும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக, என்ன மாதிரியான எஞ்சின் இதில் பயன்படுத்தப்பட இருக்கின்றது, என்னென்ன சிறப்பம்சங்கள் மற்றும் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன என்பதும் உறுதிப்படத்தப்படவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சந்தையில் பேயோன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடனேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த எஞ்சினிலேயே இரண்டு விதமான ட்யூன்-அப்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் பேயோன் கார் மாடலில் ஐ20 மற்றும் வென்யூ ஆகிய கார் மாடல்களில் வழங்கப்படும் மோட்டார் ஆப்ஷனே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, சிறப்பம்சங்களிலும் இந்த கார் மாடல்களையே அது ஒத்ததாக இருக்கும் யூகிக்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் விற்பனையில் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக ஹூண்டாயின் புதுமுக கிரோஸோவர் ரக காரின் வருகை அமைய இருக்கின்றது. ஆனால், இது விற்பனைக்கு வந்த பின்னரே என்ன மாதிரியான தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தும் என்பது தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








