ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் காரை ஹூண்டாய் சென்னைல தயாரிக்க போகுதா! அப்புறம் என்ன ஸ்வீட் எடு கொண்டாடு!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் கிரெட்டா (Creta)-வும் ஒன்றாகும். இதுவே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஆகும். மேலும், இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடல் இரண்டு விதமான பெட்ரோல் மோட்டார் மற்றும் ஒற்றை டீசல் மோட்டார் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அதாவது, ஐசிஇ (Internal Combustion Engine) வாகனமாக மட்டுமே கிரெட்டா விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த நிலையை விரைவில் மாற்ற இருக்கின்றது ஹூண்டாய். ஆமாங்க, சீக்கிரமே ஹூண்டாய் கிரெட்டா-வின் எலெக்ட்ரிக் வெர்ஷன் (Hyundai Creta EV) உலக அளவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதற்கான பணிகளிலேயே ஹூண்டாய் நிறுவனம்தற்போது மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும், கிரெட்டாவின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அது சோதனையோட்டத்திற்கும் உட்படுத்தத் தொடங்கிவிட்டது. அவ்வாறு சாலையில் பலபரீட்சையில் கிரெட்டா இவி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் இப்போதும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையிலேயே இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவிலேயே கிரெட்டா இவி-யின் உற்பத்தி பணிகளைத் தொடங்க இருக்கின்றது என்கிற தகவலே வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் யூசன் சங் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.
எதிர்காலத்திற்கான நிறுவனத்தின் உத்திகளை மதிப்பாய்வு செய்யும் விதமாகவே தன்னுடைய வருகையை அவர் பதிவு செய்திருந்தார். இதுவே அவர் தென்கொரியாவை விட்டு வெளிச் சந்தைக்காக வருவது முதல் முறையாகும். அவருடன் இன்னும் சில நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தியா வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அப்போது எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகளின் விபரங்களே தற்போது வெளியாகி இருக்கின்றன. மின்சார வாகன உற்பத்திக்கான திட்டம் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றியே அதிகம் விவாதிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், உள்நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் காரை 2025 ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இந்த கூட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
எனவே ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை வெகு சீக்கிரமே தொடங்கிவிடும் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்திருக்கின்றது. மேலும், அது தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் கிரெட்டா இவி-யாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரைதான் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது என்பதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை வெளியாகிவில்லை.
இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாட்டை முன்வைத்து அது கிரெட்டா இவி-யையே முதலில் தயாரிக்கும் என ஆட்டோத்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் யூகித்திருக்கின்றனர். இதேபோல், நிறுவனத்தின் மிகப் பெரிய கார் உற்பத்தி ஆலையான சென்னை ஆலையிலேயே ஹூண்டாயின் மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆண்டுக்கு 8.24 லட்சம் யூனிட்டுகள் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதே சென்னை ஆலை ஆகும். அதேவேளையில், இதன் புனே ஆலை 2 லட்சம் யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இதை சமீபத்திலேயே ஹூண்டாய் நிறுவனம் கையகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
கிரெட்டா இவி-யில் 45 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்படும் என்று பலர் கணித்திருக்கின்றனர். கடந்த காலத்தில் வெளியாகிய தகவல்களும் இதையே கூறுகின்றன. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் எம்ஜி இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு மிக சிறந்த போட்டியாளனாக அது மாறும்.
மேலும், இந்தியாவில் கிரெட்டா எஸ்யூவிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே வரவேற்பே கிரெட்டா இவி-க்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் மின்சார கார் பிரிவில் மிகப் பெரிய ஆதிக்கத்தை அது செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மின்சார கார் பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக டாடா நெக்ஸான் இவி இருப்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் விரைவில் 30ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை நாட்டில் கொண்டாட இருக்கின்றது. 2026 ஆம் ஆண்டிலேயே இந்த நிகழ்வு அரங்கேற இருக்கின்றது. இதற்குள்ளாக கிரெட்டா இவி விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகைக்கே இந்தியர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








