சத்தமே இல்லாமல் விற்பனையில் இருந்து அகற்றப்பட்ட கார்... ஹூண்டாய் ஆசை ஆசையாய் கொண்டு வந்த கார் இப்ப இல்ல!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் கோனா இவி (Kona EV) ஆகும். இந்த காரையே அந்நிறுவனம் தற்போது விற்பனையில் இருந்து அகற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திலும் கார் பற்றிய அனைத்து விபரங்களும் நீக்கப்பட்டு இருக்கின்றன. எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருப்பது இந்திய மின்சார கார் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.
கோனா இவி-யை விற்பனையில் இருந்து அகற்றியதற்கான காரணங்களை அதிகாரப்பூர்வ ஹூண்டாய் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த காரின் வெளியேற்றத்திற்கு கிரெட்டா இவி-யின் வருகையே காரணமாக இருக்கும் என கூறப்படுகின்றது. அதேவேளையில், இந்த காரின் அறிமுகமும் 2025 ஆம் ஆண்டு இறுதியிலேயே அரங்கேறும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

எனவே, இன்னும் ஓராண்டுக்கும் மேல் கிரெட்டா இவியின் வருகைக்கு நாட்கள் இருக்கும் நிலையில் இந்த கார் ஏன் வெளியேற்றப்பட்டது என்பதே எலெக்ட்ரிக் கார் பிரியர்களின் சந்தேகமாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலேயே இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த ஆண்டே அதன் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கின. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பே இந்த காருக்கு கிடைத்தது. ஆனால், தற்போது இந்த காருக்கான டிமாண்ட் சற்றே மங்கிக் காணப்படுகின்றது. இதுவே கோனா இவி எலெக்ட்ரிக் காரின் வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கும் என கருதப்படுகின்றது.
அதேநேரத்தில் விற்பனைக்கு வந்ததில் இருந்து இந்த காரை ஹூண்டாய் பெரிய அளவில் அப்டேட் செய்யவில்லை. ஆகையால், இதன் அப்டேட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காகவும் இப்போதைய வெர்ஷன் அகற்றப்பட்டு இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல. கோனா இவி அகற்றத்தால் இந்தியாவில் ஹூண்டாயின் எலெக்ட்ரிக் கார் பிரிவில் ஐயோனிக் 5 மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.
நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். 46 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையில் அது விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில் கோனா இவி ரூ. 24 லட்ச ரூபாய்க்கே (எக்ஸ்-ஷோரூம் விலை) விற்பனைக்குக் கிடைத்து வந்தது.
இந்த காரே இனி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. அதிக பாதுகாப்பான கார் என்கிற ரேட்டிங்கை பசுமை என்சிஏபி இடம் பெற்ற காராகவும் ஹூண்டாய் கோனா இவி உள்ளது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே அது பெற்றது.
மேலும், இந்த காரில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இது அராய் அமைப்பின் சான்றின்படியான ரேஞ்ஜ் விபரமாகும். 39.2 kWh பேட்டர பேக் தேர்விலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக 7.2 kW சார்ஜரையும் ஹூண்டாய் வழங்கி வந்தது. இதனைப் பயன்படுத்தி வீட்டிலேயே வைத்து கோனா இவியை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். மேலும், இந்த காரால் வெறும் 9.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். இத்தகைய அதி திறன் வாய்ந்த மின்சார மோட்டாரே அதில் பயன்படுத்தப்பட்டது.
136 பிஎஸ் மற்றும் 395 என்எம் ஆற்றல்களை வெளியேற்றும் திறன் கொண்டதே அதுவாகும். இதேபோல், பலதரப்பட்ட சிறப்பம்சங்களும் அந்த காரில் வழங்கப்பட்டன. அந்தவகையில், 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய இருக்கை, எலெக்ட்ரிக் சன்ரூஃப், பின்பக்கத்தில் ஏசி துவாரங்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், காற்றோட்டமான இருக்கை, க்ரூஸ் கனட்ரோல் போன்ற ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருந்து கோனா இவி அகற்றப்பட்டு இருப்பது இதனை அதிகம் நேசித்து வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. கிரெட்டா-வை போல பல ஆண்டுள் இந்த கார் விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவ்வளவு விரைவில் அது அகற்றப்பட்டு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








