இந்த காரையும் மோத விட்டு பாத்துட்டாங்காளா! எமனுக்கும் உங்களுக்கும் ஜென்ம பகையா இருந்தாலும் இந்த கார் காக்கும்!
எமனுக்கும் உங்களுக்கும் போன ஜென்மத்தில் பகையே இருந்தாலும் இந்த கார் உங்களை காப்பாத்துவிடும். அது எந்த கார்னு கேக்குறீங்களா.. ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் டக்சன் (Tucson) கார் மாடல்தான் அது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரை சமீபத்தில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பு திறன் குறித்த ஆய்வைச் செய்தது. இந்த ஆய்வின் வாயிலாகவே ஹூண்டாய் டக்சன் மிக மிக அதிக பாதுகாப்பு திறன்மிக்க வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்த கார் மோதல் ஆய்வில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 30.84 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 41 புள்ளிகளையும் டக்சன் பெற்றிருக்கின்றது. இத்தகைய அதிகபட்ச புள்ளிகளின் காரணத்தினாலேயே இந்த காருக்கு ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பாரத் என்சிஏபி வழங்கி இருக்கின்றது.

எனவே இந்தியாவின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் டக்சன்-ம் இணைந்திருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் இந்த டக்சன் எஸ்யூவி காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், மிக முக்கியமான அம்சங்களாக இந்த காரில் பன்முக ஏர் பேக்குகளை வழங்கி இருக்கின்றது.
முன் பக்கம், தலைப் பகுதிக்கான பக்கவாட்டு கர்டைன் வகை ஏர் பேக், மார்பகம் மற்றும் இடுப்பு பகுதிக்கான ஏர் பேக் உள்ளிட்டவற்றையே டக்சன் காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, சீட் பெல்ட்டை தானாக நெருக்கும் வசதி, சீட் பெல்ட் லோடு லிமிட்டர், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் ஏர்பேக், பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சம், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.

முன் பக்கம் மற்றும் பக்கவாட்டு பக்கம் என டக்சனின் அனைத்து பக்கங்களையும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது, பாரத் என்சிஏபி. இந்த அனைத்து சோதனைகளிலும் தான் ஓர் அதிக உறுதியான கார் என்பதை டக்சன் நிரூபித்திருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
இதற்கு மிக சிறந்த உதாரணமாகவே டக்சன் காரின் 5 ஸ்டார் ரேட்டிங் தகவல் அமைந்திருக்கின்றது. ஹூண்டாய் மிகவும் காஸ்ட்லியான தயாரிப்பாக டக்சன் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடல் பாதுகாப்பான வாகனம் மட்டுமல்ல அதிக சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய வாகனமும்கூட.
அந்தவகையில், டக்சன் காரில் 10.25 அங்குல திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் எச்டி ஆடியோ, வீடியோ உடன் கூடிய நேவிகேஷன் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, 60 மேற்பட்ட கார் இணைப்பு அம்சத்தை ப்ளூலிங் இணைப்பு வாயிலாக இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
இதுதவிர, பன்முக ஏர் மோட்-ம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இதேபோல் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் இருக்கைகளும் மிக அதிக சிறப்புகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றன. 10 விதமான பவர்டு அட்ஜஸ்ட் வசதி, பயணிகளில் வெளியேறுவதற்கு அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதி, குளிர்ச்சியாக்கும் மற்றும் சூடாக்கும் வசதி உள்ளிட்டவற்றையே இந்த காரில் இடம் பெற்றிருக்கும் இருக்கைகள் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து பனோரமிக் சன்ரூஃப், செல்போன் இணைப்பு வசதி, அலெக்ஸா வாயிலாக காரையும் வீட்டையும் இணைக்கும் வசதி, ஆம்பியண்ட் லைட், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் பிரீமியம் சவுண்டு சிஸ்டம், கைகளின் உதவி இல்லாமலேயே டெயில்கேட்டைக் கட்டுப்படுத்தும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி டிசையர் கார் மாடலும் இதேபோல் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்தே தற்போது ஹூண்டாய் டக்சன் தான் ஓர் அதிக பாதுகாப்பான கார் என்பதை சமீபத்திய பாரத் என்சிஏபி மோதல் ஆய்வின் வாயிலாக வெளிக்காட்டி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








