ஹூண்டாய் கம்பெனி முன்வந்துட்டாங்க!! யார் வேண்டும் என்றாலும் சார்ஜ் பண்ணிக்கலாம்... முழு கட்டண விபரம்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் அதன் அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையையும், நம் நாட்டில் ஹூண்டாய் விற்பனை செய்யும் எலக்ட்ரிக் கார்கள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் நிறைய எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளன. ஆனால், ஹூண்டாய் நிறுவனம் கோனா இவி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த சமயத்தில், மார்க்கெட்டில் அந்த அளவிற்கு எந்த எலக்ட்ரிக் காரும் விற்பனையில் இல்லை. இந்த வகையில், இந்திய சந்தையில் முதன்முதலாக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய நிறுவனங்களுள் ஒன்றாக ஹூண்டாய் விளங்குகிறது.

எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தொடர்ந்து ஈடுப்பாட்டுடன் இருக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், அதேபோல் எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கான ஃபாஸ்ட்-சார்ஜிங் மையங்களையும் நாடு முழுவதும் விரிவுப்படுத்தி வருகிறது. இதன்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதியதாக ஃபாஸ்ட்-சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் பயன்பாட்டிற்கு திறந்துள்ளது.
இதன்படி, மொத்தம் 11 ஹூண்டாய் ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையங்கள் நாட்டின் வெவ்வேறான பகுதிகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களில் 3 விதமான சார்ஜிங் பாயிண்ட்கள் உள்ளன. இதில் ஒன்று, அதிவிரைவாக பேட்டரியில் சார்ஜ் ஏற்றக்கூடிய 150 கிலோவாட்ஸ் சார்ஜர் ஆகும். மற்ற இரு சார்ஜர்கள் 60 கிலோவாட்ஸ் மற்றும் 30 கிலோவாட்ஸ் திறனை கொண்டுள்ளன.
சார்ஜரின் திறன் குறைய, குறைய அதன் சார்ஜிங் நேரம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த 3 விதமான சார்ஜர்களும் நேர்திசை மின்சாரத்தில் இயங்குபவை ஆகும். நம் வீடுகளில் மாறுதிசை மின்சாரத்தை பயன்படுத்துகிறோம். 30 கிலோவாட்ஸ் சார்ஜரில் சார்ஜ் செய்ய யூனிட்டிற்கு 18 ரூபாயும், 60 கிலோவாட்ஸ் சார்ஜரில் 21 ரூபாயும், 150 கிலோவாட்ஸ் சார்ஜரில் 24 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, அகமதாபாத் மற்றும் குருக்ராம் என 6 நகரங்களில் ஹூண்டாயின் ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. அத்துடன், டெல்லி- சண்டிகர், டெல்லி- ஜெய்பூர், ஹைதராபாத்- விஜயவாடா, மும்பை- சூரத் மற்றும் மும்பை- நாஷிக் என 5 தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதும் ஹூண்டாயின் ஃபாஸ்ட்-சார்ஜிங் வசதியை பெறலாம்.
மக்கள் எளிமையாக உபயோகப்படுத்தும் வகையில் டிசைனை கொண்டுள்ள இந்த ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையங்களின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றில் ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும் என்றில்லை, மற்ற பிராண்ட் எலக்ட்ரிக் கார்களையும் சார்ஜ் செய்யலாம். போதுமான எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் காஃபி ஷாப்ஸ் மற்றும் உணவகங்களுக்கு அருகே இத்தகைய ஃபாஸ்ட்-சார்ஜிங் மையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதாவது, காஃபி மற்றும் உணவு அருந்துவதற்குள் ஓனர்கள் தங்களது எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்துவிடலாம் என இதன் மூலம் ஹூண்டாய் கூற வருகிறது. ஹூண்டாயின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரான ஐயோனிக் 5 மாடலை இந்த ஃபாஸ்ட் சார்ஜரின் மூலம் வெறும் 21 நிமிடங்களில் 10%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம் என ஹூண்டாய் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமெனில், நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில் அப்போதுதான், எல்லாரும் தைரியமாக எலக்ட்ரிக் வாகனங்களை நெடுந்தூர பயணங்களுக்கு கொண்டு செல்ல முடியும். இந்த விஷயத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தீவிரமாக இருப்பதை புதியதாக 11 ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையங்கள் திறக்கப்பட்டு இருப்பதில் இருந்து தெரிகிறது.


Click it and Unblock the Notifications








