நேபாளத்தில் உருவாக்கப்பட்ட முதல் கார்!! இதுக்காக எத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருந்திருப்பாங்க!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் நேபாளத்தில் அதன் கார் அசெம்பிள் தொழிற்சாலையை திறந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகங்களாக கொண்டு செல்லப்பட்டு இந்த தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் ஹூண்டாய் கார் விற்பனைக்கு வெளிவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இமயமலை தொடருக்கு அடிவாரத்தில் அமைந்திருப்பதினால் இயற்கை வளம் செழித்த நாடாக உள்ள போதிலும் பொருளாதாரத்தில் சற்று பின்தங்கி இருப்பது நேபாளம் ஆகும். எந்த அளவிற்கு என்றால், இந்த நாட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை எதுவும் இப்போது வரையில் இல்லை. தற்போது, ஹூண்டாய் திறந்திருக்கும் அசெம்பிள் தொழிற்சாலை தான் நேபாளத்தின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை ஆகும்.

இந்த தொழிற்சாலையை நேபாளத்தின் லக்ஷ்மி குழுமத்துடன் இணைந்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது. நாட்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலையை நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்பா கமல் தஹால் சிறப்பு விருந்தினாராக கலந்துக் கொண்டு திறந்து சமீபத்தில் வைத்தார். அப்போது, நேபாளத்திற்கான தென்கொரிய தூதர் டே-யங் பார்க் உடன் இருந்தார்.
இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டு, இங்கு அசெம்பிள் செய்யப்பட்ட முதல் ஹூண்டாய் காராக வென்யூ விற்பனைக்கு வெளிவந்துள்ளது. இந்த காரை கொடியசைத்து விற்பனைக்கு கொண்டுவந்த பின் பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான உனசூ கிம், "நேபாளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை ஆண்டுதோறும் 5,000 யூனிட்களை அசெம்பிள் செய்யும் திறனை கொண்டுள்ளது.
மேலும், ஹூண்டாய் வென்யூ ஆலையில் இருந்து வெளியேறும் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மாடலாக இது இருக்கும். இந்த சாதனைக்காக நேபாள மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்! மாண்புமிகு பிரதமர் திரு. புஷ்பா கமல் தஹால் மற்றும் நேபாள அரசின் அசைக்க முடியாத ஆதரவிற்கு மகிழ்ச்சி அடைகிறோம். நேபாள அரசாங்கத்திடம் இருந்து அதிக ஊக்கமளிக்கும் கொள்கைகள் மற்றும் ஊக்குவிப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றார்.

ஏற்கனவே கூறியதுபோல், ஹூண்டாய் அமைத்துள்ள நேபாளத்தின் இந்த முதல் கார் அசெம்பிள் தொழிற்சாலைக்கு உள்நாட்டின் லக்ஷ்மி குழுமம் மற்றும் லோக்கல் பார்ட்னர்கள் அளித்த உதவிகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த அசெம்பிள் தொழிற்சாலையின் உருவாக்கத்திற்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மட்டுமின்றி, தென் கொரியாவில் உள்ள தலைமை ஹூண்டாய் மோட்டார் நிறுவனமும் உதவி செய்துள்ளது.
நேபாளத்தில் ஹூண்டாய் கார்களை விற்பனை செய்யும் பணிகளை லக்ஷ்மி குழுமம் மேற்கொள்ளவுள்ளது. 2009ஆம் ஆண்டில் இருந்து நேபாளத்தில் ஹூண்டாய் நிறுவனத்துடன் லக்ஷ்மி குழுமம் கூட்டணியில் உள்ளது. நேபாளத்தில் 15 நகரங்களில் 16 முக்கியமான டீலர்ஷிப்கள் லக்ஷ்மி குழுமத்திடம் உள்ளன. லக்ஷ்மி குழுமத்தின் கீழ் 20 நிறுவனங்கள் மற்றும் 2,200 பணியாளர்கள் உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நேபாளத்தில் ஹூண்டாய் கார்கள் அசெம்பிள் மட்டுமே செய்யப்பட உள்ளன. அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை கொண்டு நேபாளத்தில் ஹூண்டாய் கார்கள் உருவாக்கப்பட உள்ளன. இதனால், முன்பை காட்டிலும் நேபாளம் நாட்டில் ஹூண்டாய் கார்களின் விலைகள் கணிசமாக குறையும்.


Click it and Unblock the Notifications








