எல்லாம் நம்ம முதல்வரால...!! தமிழ்நாட்டில் கோடி, கோடியாய் கொட்டும் ஹூண்டாய் - எதுக்காக தெரியுமா?
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் நமது தமிழ்நாட்டில் கூடுதலாக சுமார் ரூ.6,180 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ஓர் மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் ஹூண்டாயின் முதலீடுகள் சுமார் ரூ.20,000 கோடியை கடந்துள்ளன. இதுகுறித்தும், இந்தியாவில் ஹூண்டாயின் அடுத்த திட்டங்கள் குறித்தும் விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக ஹூண்டாய் மோட்டாரை சொல்லலாம். மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு அடுத்து கார்கள் விற்பனையில் 2வது இடத்தை ஒவ்வொரு மாதத்திலும் பெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாத விற்பனையில்தான் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் 3வது இடத்திற்கு ஹூண்டாய் சரிந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ரூ.6,180 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடுகள் செய்யவுள்ளதாக கடந்த 2023ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்த 10 ஆண்டு காலம் ஆனது கடந்த 2023இல் இருந்து 2032 வரையில் இருக்கும். அந்த ரூ.20,000 கோடி+ முதலீட்டின் ஒரு பகுதியாகவே ரூ.6,180 கோடி அடுத்ததாக தமிழ்நாட்டில் ஹூண்டாய் சார்பில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ரூ.20,000 கோடிக்கும் அதிகமான முதலீடு ஆனது குறிப்பாக ஹூண்டாயின் வருங்கால எலக்ட்ரிக் கார்களுக்கானது என கூறப்படுகிறது.

ஹூண்டாய் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு மட்டுமின்றி, அவற்றிற்கான சார்ஜிங் கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பணிகளுக்காகவும் இந்த முதலீடுகள் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.6,180 கோடி முதலீட்டில் ரூ.180 கோடி ஆனது ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து ஹூண்டாய் கொண்டுவரும் ஹைட்ரஜன் வாலி இன்னோவேஷன் மையத்துக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லேட்டஸ்ட் முதலீடு ஆனது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தாகியது. இந்த முதலீடு குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & சிஇஓ உன்சூ கிம் பின்னர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உன்சூ கிம் பேசுகையில், "ரூ.6,180 கோடி மதிப்பிலான இந்த கணிசமான முதலீடு மாநிலத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சியை உயர்த்தவும், நாட்டை தன்னிறைவு பெறவும் மாநிலத்தின் முயற்சியை வலுப்படுத்துவதற்கான எங்கள் வலுவான உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். தமிழ்நாடு அரசாங்கத்துடனான இந்த கூட்டணி வெறும் முதலீட்டுக்கு அப்பாற்பட்டது; ஒரு வலுவான ஹைட்ரஜன் தொழிற்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இது ஒரு ஊக்கியாக உள்ளது" என்றார்.
ஹூண்டாயின் இந்த முதலீடு மூலமாக ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பியல் உருவாகும் என்பது மட்டுமின்றி, புதிய ஹைட்ஜன் மையம் அமையவுள்ள பகுதியை சுற்றிலும் கணிசமான எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளும் உருவாகும். அங்குள்ள இளம் தலைமுறையினரின் திறன் மேம்படும். இந்த புதிய முதலீட்டின் காரணமாக, விரைவில் இந்தியாவில் நெக்ஸோ என்ற தனது ஹைட்ரஜன் செல் எஸ்யூவி காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜப்பானுக்கு அடுத்து தமிழ்நாடு ஹூண்டாயின் மறு வீடு என்ற அளவிற்கு மாறிவிட்டது. ஏனெனில், இந்தியாவில் விற்பனை செய்வதற்கு மட்டுமின்றி, உலகளவில் மற்ற நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதிலும் ஹூண்டாய் நிறுவனம் அதன் ஸ்ரீபெரும்புத்தூர் தொழிற்சாலையையே பெரிதும் நம்பியுள்ளது. தற்போது, ஹைட்ரஜன் செல்களை உருவாக்குவதற்காக புதிய முதலீடு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் ஹூண்டாயின் அடித்தளம் மேலும் வலுவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications









