யாருமே எதிர்பார்க்கல! இந்தியால இந்த கார் இருந்துச்சு என்பதற்கான சுவடே இப்ப இல்ல! சைட்ல இருந்தே தூக்கிட்டாங்க!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் (Jaguar) அதன் புகழ்பெற்ற கார் மாடல் ஒன்றை இந்தியாவில் இருந்து வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, விற்பனையில் இருந்து குறிப்பிட்ட கார் மாடலை அது அகற்றி இருக்கின்றது. ஐ-பேஸ் (I-Pace) எனும் கார் மாடலையே அது விற்பனையில் இருந்து நீக்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த கார் மாடல் பற்றிய அனைத்து விபரங்களும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டு உள்ளன.
இதன் வாயிலாகவே ஜாகுவார் அந்த காரை விற்பனையில் இருந்து வெளியேற்று இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த காரின் வெளியேற்றத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. புதுமுக காரின் அறிமுகத்திற்கு வழிவிடும் விதமாக இதை விற்பனையில் இருந்து ஜாகுவார் வெளியேற்றி இருக்கலாம் என யூகிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளையில், விற்பனையில் லேசான சுணக்கத்தை இந்த கார் மாடல் சந்தித்தன் விளைவாகவே இக்கார் மாடலை ஜாகுவார் விற்பனையில் இருந்து வெளியேற்றி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஜாகுவார் ஐ-பேஸ் இதுவே ஜாகுவாரால் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
2021 ஆம் ஆண்டிலேயே இந்த கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் மிக மிக அதிக விலைக் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராகவும் இது இருந்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 1 கோடிக்கும் அதிகமான விலையிலேயே இந்த கார் நாட்டில் விற்பனைச் செய்யப்பட்டது.

ஆடி இ-ட்ரான் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எஸ்யூவி உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாகவே ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. வெற்றிகரமான மூன்று ஆண்டுகள் பயணத்தை அடுத்து தற்போது இந்த கார் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது.
ஆனால், இனி வரும் நாட்களில் இந்த கார் நம் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்காது. அதேவேளையில், உலக சந்தையில் இந்த எலெக்ட்ரிக் கார் எந்தவொரு தடையும் இன்றி விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதியாண்டு 2024இல் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் வெறும் 31 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.
இது மிக மிக குறைவான எண்ணிக்கையாகும். ஜாகுவார் எதிர்பார்த்ததைவிட குறைவான எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், பிஎம்டபிள்யூவின் ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் மாடலோ 738 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. ஆகையால், சொகுசு எலெக்ட்ரிக் கார் பிரிவில் பிஎம்டபிள்யூ-வே தற்போது தலைவனாக உள்ளது.
ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 410 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 90 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியே ஜாகுவார் ஐ-பேஸ் காரில் வழங்கப்பட்டது. இந்த காரை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 45 நிமிடங்களே போதும்.
ஆனால், பாஸ்ட் சார்ஜிங் முறையிலேயே இந்த அளவு அதிக வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும். அதேவேளையில், வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 மணி நேரம் வரை அது முழுமையாக சார்ஜாக எடுத்துக் கொள்ளும். இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இந்த காரின் இயக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 400 எச்பி மற்றும் 696 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ ஆகும். அதவேளையில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட இதற்கு வெறும் 4.8 செகண்டுகளே போதுமானது.
இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காரையே இந்தியாவில் இருந்து சத்தமே இல்லாமல் ஜாகுவார் நிறுவனம் வெளியேற்றி இருக்கின்றது. எல்இடி மின் விளக்கு, முழு நீள கண்ணாடி மேற்கூரை, தொடுதிரை இன்ஃபோடெயின்மென் சிஸ்டம், இணைப்பு தொழில்நுட்பம், தலைகளுக்கு மேல் டிவி போன்ற திரை, லெதர் இருக்கை, சென்சார் அடிப்படையிலான பூட் மற்றும் 825W மெரிடியன் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட எக்கசக்க பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகளும் ஜாகுவார் ஐ-பேஸ் கார் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை அம்சங்களையும், மிக சிறந்த ரேஞ்ஜ் திறனையும் கொண்டிருக்கின்ற போதிலும் ஜாகுவார் ஐ-பேஸ் இந்தியர்களைக் கவர தவறிவிட்டது. இதன் விளைவாகவே தற்போது அந்த கார் விற்பனையில் இல்லாத சூழல் உருவாகி இருக்கின்றது. விரைவில் புதுப்பித்தல்களுடன் இந்த கார் நாட்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








