ரத்தன் டாடா ஏற்படுத்திவிட்டு சென்ற தீப்பொறி!! எல்லாரும் வாங்க நினைக்குறாங்க!
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover - JLR), உலகளவில் மிக பிரபலமான சொகுசு கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் டாடா குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து இந்த நிறுவனத்தை டாடா குழுமத்தின் அப்போதைய தலைவராக இருந்த மறைந்த ரத்தன் டாடா அவர்கள் எவ்வாறு கைப்பற்றினார் என்பதை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். மேலும், டாடாவின் கைக்கு மாறிய பின்னர் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை பற்றியும் தெரிவித்து இருந்தோம்.
இந்தியாவில் இந்த சொகுசு கார் நிறுவனத்தின் வளர்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம். தனது நிறுவனத்தை வாங்கிக் கொள்ள சொல்லி ஃபோர்டு நிறுவனத்திடம் அவமரியாதை அடைந்த ரத்தன் டாடா அவர்கள் அடுத்த 10 வருடங்களுக்கு உள்ளாக ஃபோர்டிடம் இருந்து ஜாகுவார் லேண்ட் ரோவரை கைப்பற்றியது ஒரு பெரிய கதை.

ஃபோர்டு மோட்டார் போன்ற உலகளவில் பரந்து விரிந்த நிறுவனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயக்கும் ஒரு நிறுவனத்தை விற்க முன்வருகிறது என்றால், விற்கப்படும் நிறுவனம் எந்த அளவிற்கு நஷ்டத்தை நோக்கி சரிந்துக் கொண்டிருந்தது என்பதை அறியலாம். ஃபோர்டு நிறுவனம் டாடாவிடம் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை வழங்கிய சமயத்தில் இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது.
ஆனால், அவை அனைத்தையும் டாடா க்ரூப் மாற்றியது. 2008ஆம் ஆண்டில் டாடா க்ரூப்பால் வாங்கப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அடுத்த 1 வருடத்தில், அதாவது 2009ஆம் ஆண்டில் 9% வளர்ச்சியை கார்கள் விற்பனையில் பதிவு செய்தது. அது தற்போது வரையிலும் இந்தியாவில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஜேஎல்ஆர் நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் விற்பனை நல்ல வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 6 மாத காலத்தில் மொத்தம் 3,214 எஸ்யூவி கார்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 6 மாத காலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜேஎல்ஆர் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 36% அதிகமாகும். ஜேஎல்ஆர்-இன் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் எஸ்யூவி கார்கள் ஆகும்.
குறிப்பாக, டிஃபெண்டர் கார்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் ராக்கெட் வேகத்தில் சுமார் 75% அதிகரித்துள்ளது. டாடா குழுமம் ஜேஎல்ஆர்-இன் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய சில மாதங்களுக்கு முன் துவங்கியது. கார்கள் விற்பனை அதிகரிப்புக்கு இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், அதற்கு முன் வரையில் இந்த கார்கள் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் முழு காராக உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, மத்திய அரசால் விதிக்கப்படும் வரி குறைவதால் கார்களின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளன. இது அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
இதன் மூலமாக, ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்களை புக் செய்பவர்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்கள் விற்பனை இந்தியாவில் முந்தைய ஆண்டை காட்டிலும் கடந்த 3 மாதங்களில் (ஜூலை- செப்டம்பர்) 41 சதவீதமும், அதற்கு முந்தைய 3 மாதங்களில் 31 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஜேஎல்ஆர் நிறுவனத்தில் இருந்து கடைசியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் ரேஞ்ச் ரோவர் எஸ்வி ரந்தம்போர் எடிசன் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்தும் இந்தியாவில் சில கார்களின் விற்பனை கடந்த காலங்களில் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஜாகுவார் சொகுசு கார்களின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை. இருப்பினும், லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களின் விற்பனை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதைதான் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டும் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









