புது வண்டி வாங்க போறவங்க தலையில் இடியை இறக்கிய அரசு! திடுதிப்புனு வெளியான அறிவிப்பால் நிலைகுலைந்த மக்கள்!
கர்நாடகா (Karnataka) மாநிலத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு இனி அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக மாநில அரசு அறிமுகம் செய்துள்ள ஒரு புதிய சட்டம்தான் இதற்கு காரணம். கர்நாடக மோட்டார் வாகன வரி (திருத்தம்) சட்டம், 2024 (Karnataka Motor Vehicle Taxation (Amendment) Act, 2024) என்ற பெயரில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு கர்நாடக மாநில ஆளுநர் தவர்சந்த் கெலாட் (Thaawarchand Gehlot) ஒப்புதல் அளித்துள்ளார். நேற்று முன் தினம் (மார்ச் 6) அவர் ஒப்புதல் அளித்த நிலையில், நேற்றைய தினம் (மார்ச் 7) இந்த சட்டம் அரசிதழில் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த புதிய சட்டத்தின் கீழ், இனி போக்குவரத்து வாகனங்களுக்கு (Transport Vehicles) இனி 3 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பதிவு செய்யும்போது, இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கூடுதல் நிதியானது, கர்நாடக மோட்டார் போக்குவரத்து மற்றும் அதன் உடன் தொடர்புடைய தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல நிதிக்கு செல்லும்.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், போக்குவரத்து வாகனங்கள் என நாங்கள் இங்கே கூறியிருப்பது வர்த்தக வாகனங்கள் (Commercial Vehicles) ஆகும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், மஞ்சள் நிற நம்பர் பிளேட் உடன் இயக்கப்படும் டாக்ஸி போன்ற வாகனங்களுக்குதான் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.

தனி நபர் பயன்பாடுகளுக்காக வாங்கப்படும் வெள்ளை நிற நம்பர் பிளேட் வாகனங்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. எனவே வர்த்தக வாகனங்களை வாங்குபவர்கள்தான், இந்த கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர். அவர்கள் இனி வாகனங்களை சொந்தமாக்குவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது அத்தியாவசிய பொருட்களின் விலையில் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தாலம் என கருதப்படுகிறது. வர்த்தக வாகனங்கள் மூலமாக சரக்கு போக்குவரத்து நடைபெறுவதுதான் இதற்கு காரணம். அதேபோன்று டாக்ஸி வாடகையும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வர்த்தக வாகனங்களை வாங்குபவர்களுக்கு மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles)வாங்குபவர்களுக்கும் கர்நாடக அரசு 'செக்' வைத்துள்ளது.
இந்த புதிய சட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வாழ்நாள் வரி (Lifetime Tax) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் விலை 25 லட்ச ரூபாய்க்கும் அதிகம் என்றால், 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வர்த்தக வாகனங்கள், தனி நபர் வாகனங்கள் என்றில்லாமல், அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்தும்.
கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இப்படியான ஒரு வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் 25 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கர்நாடக மாநிலத்தில் வர்த்தக வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் இந்த வரி உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம். கர்நாடகாவில் இந்த வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், கூடுதல் தொகையை செலுத்த தயாராகி கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








