புதுசா கியா காரை வாங்கும் பிளானில் இருப்பவங்க இப்போதே புக் பண்ணிடுங்க!! விலையை ஏத்த போறாங்க...
கியா (Kia) இந்தியாவில் அதன் கார்கள் அனைத்தின் விலைகளையும் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அதிகரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, கியா கார்கள் விலைகள் எந்த அளவிற்கு உயர்த்தப்பட உள்ளன என்பதையும், இதன் காரணமாக கியா கார்கள் விற்பனை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக கியா உள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்யும் கியா நிறுவனம் விரைவில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அதன் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய 2024-25ஆம் நிதியாண்டு துவங்கவுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டு புதியதாக துவங்கும்போதும் கார்களின் விலைகள் அதிகரிக்கப்படுவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில், கியா நிறுவனம் அதன் கார்களின் விலைகளை இந்தியாவில் 3% அதிகரிக்க உள்ளது. இதன்படி, கியா செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் என மக்கள் நிறைய பேர் வாங்கும் கார்களின் விலைகள் உயரவுள்ளன.
வழக்கம்போல், இந்த முறையும் விலை உயர்வுக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் கார் பாகங்களின் விலைகளும், போக்குவரத்து செலவுகளும் காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 2024ஆம் வருடத்தில் கியா நிறுவனம் கொண்டுவரும் முதல் விலை உயர்வு இதுவாகும். இதுகுறித்து கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை அதிகாரி ஹர்தீப் சிங் ப்ரார் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "கியாவில், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். எவ்வாறாயினும், பொருட்களின் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு, பாதகமான மாற்று விகிதம் மற்றும் அதிகரித்துவரும் உள்ளீடு செலவு ஆகியவற்றின் காரணமாக, விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஆனால் உண்மையில், கியா நிறுவனம் இந்த விலை அதிகரிப்பின் கணிசமான பகுதியை உள்வாங்கிக் கொள்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான கியா கார்களை தங்கள் சேமிப்பில் பெரிய இழப்பு இல்லாமல் தொடர்ந்து ஓட்ட அனுமதிக்கிறது" என்றார். இந்தியாவில் கியா நிறுவனம் அதன் முதல் காராக செல்டோஸை 2019இல் அறிமுகம் செய்தது.

அப்போதில் இருந்து இப்போது வரையில் சுமார் 11.6 லட்ச கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, இந்திய சந்தையிலும், வெளிநாட்டு சந்தைகளுக்கும் கியா ஏற்றுமதி செய்துள்ளது. இதில், அதிகப்பட்சமாக செல்டோஸ் 6.13 லட்ச கார்களும், சொனெட் 3.95 லட்ச கார்களும், கேரன்ஸ் 1.59 லட்ச கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்துக்கு ஆந்திர பிரதேசத்தில் தொழிற்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில், கொரிய மற்றும் ஜப்பானிய கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால்தான், குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக கியா உருவெடுத்துள்ளது. இருப்பினும், கார்கள் விலைகளில் 3% அதிகரிப்பு என்பதை வாடிக்கையாளர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்துதான் கியா கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதால் விருப்பப்படுவோர் இப்போதே காரை முன்பதிவு செய்துக் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications









