எலெக்ட்ரானிக் ஆயில் பம்பில் பிரச்னை.. இந்தியர்களிடம் விற்ற காரை திருப்பி அழைக்கும் கியா..
டாடா (Tata Motors), மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் மஹிந்திரா (Mahindra) போல இந்தியர்களின் ஃபேவரிட் பிராண்டாக மாறி இருக்கின்றது தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார்ஸ் (Kia Motors). இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலாக செல்டோஸ் (Seltos) உள்ளது.
இதுவே நிறுவனம் இந்தியாவில் கால்தடம் பதித்து விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கே கியா நிறுவனம் தற்போது அழைப்பு (Recall) விடுத்து இருக்கின்றது. 4 ஆயிரத்து 358 யூனிட்டுகளுக்கு மட்டுமே அது அழைப்பு விடுத்து உள்ளது.

அந்த குறிப்பிட்ட கார்களில் மட்டும், அதன் எலெக்ட்ரானிக் ஆயில் பம்ப் கன்ட்ரோல்லர் (Oil Pump Controller)-இல் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறியே இந்த அழைப்பை கியா நிறுவனம் விடுத்திருக்கின்றது. சிவிடி கியர்பாக்ஸ் (CVT gearbox) கொண்ட தேர்வுகளிலேயே இந்த சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.
மேலும், சென்ற ஆண்டு பிப்ரவரி 28 மற்றும் 13 ஜூலை ஆகிய ஆகிய நாட்களில் தயாரிக்கப்பட்ட கார்களே இந்த பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், அந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கியா செல்டோஸ் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்டுகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது.
நீங்கள் வைத்திருக்கும் கியா செல்டோஸ் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு மேலே குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கும் எனில் உங்கள் டீலர் அல்லது சர்வீஸ் மையத்தை அணுகுவது நல்லது. கியா நிறுவனம் இந்த கோளாறை இலவசமாக சரி செய்துக் கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளையில், உங்களுடைய கியா செல்டோஸ் எஸ்யூவி இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படவில்லை என்றால் இதுபற்றிய எந்த கவலையும் நீங்கள் பட தேவையில்லை. பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகக் கூறப்படும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட செல்டோஸில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், கியா செல்டோஸ் எஸ்யூவி கார் மாடலில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய மோட்டார் தேர்வுகளும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
கியா செல்டோஸ் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகவும் தாராளமான அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப், புதிய பம்பர், பெரிய கிரில், அட்டகாசமான ஸ்டைலிலான ஹெட்லைட், பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய டே டைம் லைட் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், 10.25 அங்குல இணைப்பு வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் செல்டோஸில் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, 17 வகையான தனித்துவமான வசதியை வழங்கும் அடாஸ் தொழில்நுட்பம், 15க்கும் மேற்பட்ட உயர் வகை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 32 வகையான இணைப்பு அம்சங்கள் ஆகியவற்றையும் செல்டோஸில் கியா வழங்குகின்றது.
பாதுகாப்பிற்காக ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டிபிஎம்எஸ் மற்றும் மும்முனை சீட் பெல்ட் போன்றவற்றையும் கியா செல்டோஸில் வழங்கி இருக்கின்றது. இதுபோன்று சிறப்பம்சங்களிலும், எஞ்சின் தேர்வுகளிலும் இந்த கார் மாடல் பரந்து விரிந்துக் காணப்படுவதினாலேயே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அது பெற்றுக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று ஏற்கனவே விற்பனைச் செய்யப்பட்ட கார்களில் கோளாறு இருப்பதாக கூறி கார் உற்பத்தியாளர்கள் அழைப்பு விடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக முன்னணி வாகன உற்பத்தியாளர்கள்கூட இதுபோன்று ரீ-கால் விடுத்திருக்கின்றனர். ஏன் பல லட்சக் கணக்கான கார்களுக்கு அழைப்பு விடுத்த சம்பவம்கூட இந்த உலகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








