குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களில் கியா கேரன்ஸ் (Kia Carens)-ம் ஒன்றாகும். ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் என இரண்டு விதமான இருக்கைகள் ஆப்ஷனில் இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனால்தான் பெரிய குடும்பங்களைக் கொண்டவர்களுக்கான கார் மாடலாக கேரன்ஸ் கருதப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அதிக பேருடன் பயணிக்க ஏற்ற இந்த கியா கேரன்ஸ் கார் பாதுகாப்பான பயணத்தை வழங்குமா என்கிற சந்தேகம் எழும்பி இருக்கின்றது. இந்த சந்தேகத்திற்கான விடையும் தற்போது கிடைத்து வெளியாகிவிட்டது. அண்மையில், தென் கொரிய நிறுவனத்தின் இந்த தயாரிப்பை குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு மோதல் ஆய்விற்கு உட்படுத்தி, அதன் பாதுகாப்பு திறன்களை சோதனைச் செய்தது.

கடுமையான ஆய்வுகளுக்கு பின்னர் அந்த கார் ஐந்திற்கு 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே குளோபல் என்சிஏபி தற்போது வெளியுலகிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றது. இது அவ்வளவு மோசமான தர சான்று என்றும் சொல்லிவிட முடியாது, மிக சிறந்த தர சான்று என்றும் சொல்லிவிட முடியாது.
ஏனெனில், இது ஓர் நடுநிலையான தர சான்று ஆகும். குறிப்பாக, பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலேயே இந்த கார் 3 ஸ்டார்களை பெற்றிருக்கின்றது. அதேவேளையில், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இதே கியா கேரன்ஸ் 5 ஸ்டார்களைப் பெற்றுக் குவித்திருக்கின்றது. அதாவது, குழந்தைகளுக்கு இந்த காரில் பாதுகாப்பை வழங்கும் வசதிகள் வழங்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

49 புள்ளிக்கு 41 புள்ளிகளை அது பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இதே கார் மாடல் 34 புள்ளிகளுக்கு வெறும் 22.07 புள்ளிகளை மட்டுமே பெற்றது. இதன் விளைவாகவே அது இரண்டு ஸ்டார்களை இழந்து வெறும் மூன்று ஸ்டார்களை மட்டுமே பெற்றிருக்கின்றது.
முன்பு 2022 இல் இருந்ததைக் காட்டிலும் நல்ல முன்னேற்றத்தை இந்த கார் சந்தித்துள்ளது. முன்பு 2022 ஆம் ஆண்டில் இதே கார் மாடலை குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என இருவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் மூன்று ஸ்டார்களை மட்டுமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்ட், மும்முனை சீட் பெல்ட், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் கியா கேரன்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்தனை பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கி இருந்தும் அந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 3 ஸ்டார்களை மட்டுமே குவித்து இருக்கின்றது. இதற்கு அதன் உடல் போதுமான உறுதியானதாக இல்லாமல் போனதே காரணமாக உள்ளது. இதனால் கழுத்து போன்று முக்கிய உடல் உறுப்புகள் மிக மோசமான பின் விளைவுகளைச் சந்திக்கும் நிலை உருவாகியது.
இதன் விளைவாகவே பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் அது குறைவான ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது. ஆனால், இதனால் பயணிகளுக்கு அதிக ஆபத்தான சூழலை அது ஏற்படுத்திவிடும் என்பதற்கு அர்த்தம் அல்ல. கணிசமான அளவு, அதாவது, மிகப் பெரிய ஆபத்தில்லாமல் இந்த கார் பயணிகளைக் காப்பாற்றும்.
கியா கேரன்ஸ் எம்பிவி இந்தியாவில் ரூ. 10.51 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 19.66 லட்சம் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகியவற்றிற்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் மாருதி சுஸுகியின் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவற்றிற்கே மிக சிறப்பான டிமாண்டைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு போட்டியளிக்கும் விதமாக கேரன்ஸ் எம்பிவிக்கும் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









