கூட்டம் அலைமோதுவதை தடுக்க இப்பவே புக்கிங்கை தொடங்கிட்டாங்க! கியாவிற்கு தெரியாமல் டீலர்கள் செய்த காரியம்!
இந்தியாவின் எஸ்யூவி கார் மார்க்கெட்டை சீக்கிரமே அலங்கரிக்க வர இருக்கின்றது கியா (Kia) நிறுவனத்தின் புதுமுக கார் மாடல் ஒன்று. சிரோஸ் (Syros), இதுவே அந்த புதுமுக கார் மாடல் ஆகும். ஏற்கனவே இந்த கார் மாடலின் பக்கம் இந்தியர்களை வளைத்துப் போடுவதற்கான பணியை கியா தொடங்கிவிட்டது. டீசர் படங்கள் வாயிலாகவே இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை அது ஈர்த்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அந்த காருக்கான புக்கிங் பணிகளும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், டீலர்கள் அளவிலேயே புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஆமாங்க, கியா நிறுவனம் இந்த காருக்கான புக்கிங் பணிகளை அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கவில்லை. இது தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையிலேயே டீலர்ஷிப்புகள் அளவிலான அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன.

வருகின்ற வியாழக்கிழமை (டிசம்பர் 19) அன்றே இந்த காரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய கியா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. அன்றையே தினத்திலேயே சிரோஸ் காருக்கான அதிகாரப்பூர்வ புக்கிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அந்த நாளிலேயே காரின் விலைகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்போது பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்படக் கூடாது என்கிற நோக்கிலேயே டீலர்கள் புக்கிங்கைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையிலேயே புக்கிங்கை அவர்கள் ஏற்று வருகின்றனர். அதேவேளையில், குறிப்பிட்ட சில டீலர்களே இந்த பணியைத் தொடங்கியிருக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, சிரோஸ் கார் மாடல் குறித்து விசாரணை மேற்கொள்வோரிடம் மட்டுமே முன் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ரிசர்வ் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. கியா நிறுவனம் இந்த காரை சொனெட் (Sonet)-க்கு மேலேயும், செல்டோஸ் (Seltos)-க்கு கீழேயும் நிலை நிறுத்த இருக்கின்றது.
இரண்டும் நிறுவனத்தின் நல்ல விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்யூவி ரக கார் மாடல்கள் ஆகும். மேலும், இதன் தோற்றம் இந்தியர்களுக்கு மிகவும் பரீட்சையமான மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) ஹேட்ச்பேக் கார் மாடலை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்த காருக்கு கியா நிறுவனம் 'டால் பாய்' உருவத்தையே வழங்கி இருக்கின்றது. எனவே இந்த கார் பார்க்க வேகன்ஆர் மற்றும் கேரன்ஸ், இந்த இரண்டையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கேரன்ஸ், கியாவின் எம்பிவி ரக கார் மாடல் ஆகும்.
ஸ்டைல் வேகன்ஆர் மற்றும் கேரன்ஸைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தாலும் அதன் அதன் லுக் தனித்துவமானதாக இருக்கும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதன் டீசர் படங்கள் உள்ளன. குறிப்பாக, புதிய சிரோஸ் காரை மற்ற கார் மாடல்களிடம் இருந்து மாறுபட்ட காட்ட வேண்டும் என்பதற்காக சில தனித்துவமான அம்சங்களை கியா வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், படிக்கட்டை போல மூன்றடுக்கு அமைப்பைக் கொண்ட ஹெட்லைட், இதன் பக்கவாட்டிலேயே குச்சி போன்ற எல்இடி லைட் ஒன்றும் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இதேபோல், ரூஃப் ரெயில், தனித்துவமானா லுக்கைக் கொண்ட பெரிய கிரில் மற்றும் பம்பர் ஆகியவையும் புதிய சிரோஸ்-க்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும் என தெரிகின்றது.
இதேபோல், தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மாடல் தனித்துவமானதாக இருக்கும் என்பது டீசர் படங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அடாஸ் (ADAS) அம்சம், வெண்டிலேஷன் மற்றும் ரெக்லைனிங் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்டவை புதிய சிரோஸ் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
எஞ்சினை பொருத்தவரை இந்த காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதேபோல், ஆறு விதமான வேரியண்டுகளிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இத்தகைய காருக்கே தற்போது புக்கிங் பணிகளை தொடங்கி இருக்கின்றனர் கியா டீலர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அனைத்து எஸ்யூவி கார் காதலர்களையும் கவரும் விதமாக கியா நிறுவனம் இந்த புதிய சிரோஸ் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








