வெளிநாடுகளுக்கு கொடுத்தது போதும்... இனி மொத்தமும் இந்தியாவுக்குதான்... பிரபல நிறுவனம் அதிரடி முடிவு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையானது, ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலம் அனந்த்ப்பூர் (Anantapur) பகுதியில் இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ததில், கியா நிறுவனம் புதிய மைல்கல் (Milestone) ஒன்றை கடந்துள்ளது. 2.50 லட்சம் கார்கள் ஏற்றுமதி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். அனந்த்ப்பூர் தொழிற்சாலையில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,55,133 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இங்கிருந்து கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில், தென் ஆப்ரிக்கா, சிலி மற்றும் பராகுவே போன்றவை குறிப்பிடத்தக்க நாடுகள் ஆகும். கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்த கார் என்ற பெருமையை கியா செல்டோஸ் (Kia Seltos) பெறுகிறது.

கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த கார்களில், 59 சதவீதம் கியா செல்டோஸ்தான். இதற்கு அடுத்தபடியாக கியா சொனெட்(Kia Sonet) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய கார்கள் உள்ளன. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கியா சொனெட் காரின் பங்களிப்பு 34 சதவீதம் ஆகவும், கியா கேரன்ஸ் காரின் பங்களிப்பு 7 சதவீதம் ஆகவும் உள்ளது.
கியா நிறுவனத்தின் முக்கியமான ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆனால் சமீப ஆண்டுகளாக கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதை காட்டிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களை இந்திய சந்தையிலேயே விற்பனை செய்வதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

நடப்பு 2024ம் ஆண்டில் இருந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களில், 90 சதவீத கார்கள், இந்திய சந்தையிலேயே விற்பனை செய்யப்படும் என கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கியா கார்களுக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) தற்போது இருப்பதை காட்டிலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கியா நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், புதிய தலைமுறை கார்னிவல் காரை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக களமிறக்கப்படலாம் என தெரிகிறது.
இதுதவிர கியா சைரோஸ் (Kia Syros) என்ற பெயரில், மற்றொரு புத்தம் புதிய கார் ஒன்றையும் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் அனேகமாக வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா நிறுவனம் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நேரத்தில், ஏற்றுமதிக்கு பதிலாக, உள்நாட்டு விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவது என்ற முடிவை எடுத்துள்ளது. இதை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என கருதலாம்.


Click it and Unblock the Notifications








