சென்னை வாசிகளே முன்பணம் கட்டாமலே கியா காரை ஓட்டி செல்லலாம்.. இன்சூரன்ஸ், பதிவு தொல்லையும்கூட இல்ல..
தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia) அதன் கார் மாடல்கள் சிலவற்றை குத்தகைத் திட்டத்தின்கீழ் வழங்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கிடைக்க இருக்கும் பலன்கள் என்ன? என்னென்ன கார் மாடல்களை இது லீசுக்கு வழங்க இருக்கின்றது? கியா கார்களை லீசுக்கு எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றது தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் கியா. இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகள் சிலவற்றை குத்தகைத் திட்டத்தின்கீழ் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதற்காக அந்நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

ஓரிக்ஸ் ஆட்டோ (ORIX Auto Infrastructure Services Limited) எனும் நிறுவனத்துடனேயே அது தற்போது இணைந்திருக்கின்றது. சொனெட் (Sonet) மற்றும் செல்டோஸ் (Seltos) ஆகிய எஸ்யூவி ரக கார் மாடல்களையும், கேரன்ஸ் (Carens) எம்பிவி ரக கார் மாடலையுமே அது குத்தகை திட்டத்தின் கீழ் வழங்க இருக்கின்றது.
குத்தகைத் திட்டம் ரூ. 21,900 தொடங்கி ரூ. 28,800 வரையில் கிடைக்கும். மாடல் மற்றும் குத்தகை ஆண்டு ஆகிய விருப்பங்களைப் பொருத்து லீஸ் கட்டணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குத்தகை திட்டத்தின்கீழ் கார்களை எடுக்கும்போது பதிவு, பராமரிப்பு, இன்சூரன்ஸ் என எந்த தொந்தரவும் நமக்கு இருக்காது.
அனைத்தையும் நிறுவனமே கவனித்துக் கொள்ளும். அதேவேளையில், குத்தகை திட்டத்திலேயே இதற்கான அனைத்து தொகையும் சேர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், வாங்கிய கார் பிடிக்கவில்லை மிகப் பெரிய நஷ்டத்தில் ரீ-சேல் செய்ய வேண்டியிருக்கும். இந்த தலைவலியும் காரை லீஸுக்கு எடுக்கும்போது நமக்கு இருக்காது.
லீசுக்கு எடுத்த கார் பிடிக்கவில்லை என்றால் லீஸ் கால கட்டம் முடிந்த பின்னர் அதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம். மேலும், எந்தவொரு கூடுதல் கட்டணமும் கேட்க மாட்டார்கள். லீஸ் தொகையை மட்டுமே அவர்களுக்கு நாம் வழங்க வேண்டி இருக்கும். இத்தகைய சூப்பரான திட்டத்தையே கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது.
லீஸ் மாதங்கள் 24 மாதங்கள் தொடங்கி 60 மாதங்கள் வரை வழங்கப்படுகின்றது. இதற்கு எந்தவொரு முன் தொகையும் நாம் செலுத்த வேண்டியதில்லை. முதல் கட்டமாக இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மட்டுமே தன்னுடைய இந்த குத்தகை சேவையை கியா தொடங்கி இருக்கின்றது.
அதில் நம்முடைய சென்னை மாநகரமும் அடங்கும். இத்துடன், டெல்லி என்சிஆர், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் லீஸ் திட்டத்தை கியா தொடங்கி இருக்கின்றது. குத்தகை காலம் முடிவடையும்பட்சத்தில் அதே காரை மீண்டும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும் அல்லது அந்த வாகனத்தை நிறுவனத்திடமே ஒப்படைத்திடவும் செய்யலாம்.
இதுதவிர வேறு வாகனத்திற்கு மாறும் வசதியையும் கியா வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. அதாவது, நீங்கள் கியா சொனெட் காரை 24 மாதங்களுக்கு குத்தகை எடுத்திருக்கின்றீர்கள் வைத்துக் கொள்வோம். இந்த கால கட்டம் முடிவடைந்த பின்னர், சொனெட் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த காரை ஒப்படைத்துவிட்டு செல்டோஸையோ அல்லது கேரன்ஸையோ நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
இது எதுவுமே இல்லை காரை ஒப்படைக்க மட்டும் வேண்டும் என்றால், அதையும் செய்துக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான திட்டத்தையே கியா இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. ஏற்கனவே, இந்த சேவையை இந்தியாவில் பல முன்னணி கார் உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களே இந்தியாவில் கார் லீஸ் திட்டத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த நிறுவனங்கள் மட்டுமல்ல சில முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்கள் கார் லீஸ் திட்டத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களே கார்களை லீஸ்க்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பு நிலவுவதனாலேயே முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் கார் லீஸ் திட்டத்தை அறிவித்த வண்ணம் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








