குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்கள்! டாடாவிற்கு செக் வைக்க வரும் சீன நிறுவனம்! போட்டி அனல் பறக்க போகுது!
உலகின் மிகப்பெரிய கார் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்களும் இந்திய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றன. கியா (Kia), எம்ஜி மோட்டார் (MG Motor) மற்றும் சிட்ரோன் (Citroen) போன்றவை, சமீபத்திய வருடங்களில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்த வரிசையில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் இந்திய சந்தையில் தங்களது வர்த்தகத்தை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், லீப் மோட்டார் (Leapmotor) நிறுவனமும் ஒன்றாகும். இது சீனாவை (China) சேர்ந்தது. லீப் மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனம் இந்திய சந்தையில் எப்போது நுழையவுள்ளது? என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு 2024ம் ஆண்டின் இறுதியில் லீப் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் நுழையவுள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லீப் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் முதலில் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அவை டி03 (T03) மற்றும் சி10 (C10) ஆகியவை ஆகும். இதில் டி03 எலெக்ட்ரிக் காரானது, ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்தது. மறுபக்கம் சி10 காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது.
இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காருடன், லீப் மோட்டார் டி03 போட்டியிடும். இதன் அளவும் கூட கிட்டத்தட்ட டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை போன்றேதான் இருக்கும். இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சுமார் 270 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.

மறுபக்கம் சி10 எலெக்ட்ரிக் காரானது, கிட்டத்தட்ட டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் எம்ஜி ஹெக்டர் (MG Hector) அளவில் இருக்கும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 420 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய லீப் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லீப் மோட்டார் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்தியாவில் லீப் மோட்டார் நுழையவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில், குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக லீப் மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது. எனவே லீப் மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள் 2 எலெக்ட்ரிக் கார்களுடன் இந்திய சந்தையில் நுழைந்து விட்டாலும் கூட, லீப் மோட்டார் நிறுவனம் அத்துடன் நிற்க போவதில்லை. ஏனெனில் 2027ம் ஆண்டிற்குள் மேலும் 4 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய லீப் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக வரும் 2027ம் ஆண்டிற்குள் லீப் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை 6 ஆக இருக்கலாம். இதில் 3 கார்கள் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தவையாகவும், 3 கார்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவையாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








