மற்ற நாடுகள் பொறாமை பட இந்தியாவில் உருவாக்கப்பட்ட கார்! வரியை குறைக்க ஸ்மார்ட் மூவ்!!
மேட்-இன்-இந்தியா (Made-in-India) கார்களுக்கு உலகம் முழுவதிலும் பல நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவில் விற்றால்தான் பெரிய தொகையை வரியாக மிச்சப்படுத்த முடியும். ஆனால், ஒரு நாட்டில் புதியதாக ஒரு காரின் உற்பத்தியை துவங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் இருந்து வாங்க வேண்டும். இதைவிட முக்கியம், மிக பெரிய தொகையை செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும்.
ஆதலால், இந்த காரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து விற்றால் இலாபம் கிடைக்குமா என்பது உறுதியாக தெரிந்த பின்பே வெளிநாட்டு கார் நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தியை இந்தியாவில் துவங்குகின்றன. இது அந்த கார் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் பலன் அளிக்கக்கூடியதாக உள்ளது. அவ்வாறான ஒரு நடவடிக்கையை தான் லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் இந்தியாவில் துவங்கியுள்ளது.

கம்பீரமான மற்றும் விலையுயர்ந்த எஸ்யூவி கார்களை (SUV Cars) உற்பத்தி செய்வதில் உலகளவில் பிரபலமான நிறுவனமாக லேண்ட் ரோவர் விளங்குகிறது. இந்த நிறுவனம், கடந்த 2024 மே மாதத்தில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்வது என முக்கியமான நடவடிக்கையை துவங்கியது. அதாவது, இங்கிலாந்தில் இருந்து கார்களுக்கான பாகங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு புனேவில் உள்ள லேண்ட் ரோவரின் தொழிற்சாலையில் அசெம்பிள் (Assemble) செய்யப்பட்டு முழு ரேஞ்ச் ரோவர் கார்களாக உருவாக்கப்படுகின்றன.
இதன்படி, ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Sport) கார்கள் இவ்வாறு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பு வரையில் ரேஞ்ச் ரோவர் கார்கள் முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டதால், அவற்றின் விலைகள் அதிகமாக இருந்தன. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய ஆரம்பித்த பின்பு ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் குறைய துவங்கியதால், அவற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மேட்-இன்-இந்தியா 2025 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய 2025ஆம் வருடத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.45 கோடியில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் முந்தைய விலையை காட்டிலும் ரூ.5 லட்சம் அதிகமாகும்.
இந்த கூடுதல் விலைக்கேற்ப செமி-அனிலைன் லெதர் இருக்கைகள், மசாஜ் வசதி கொண்ட முன் இருக்கைகள் மற்றும் ஹெட்ஸ்-அப்-டிஸ்பிளே (HUD) என புதிய வசதிகள் 2025 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், முழுவதும் வெளிநாட்டில் இருந்து முன்பு இறக்குமதி செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் விலையை காட்டிலும் இப்போதும் இது ரூ.25 லட்சம் குறைவாகும்.

வழக்கம்போல், எம்.எல்.ஏ-ஃபிளெக்ஸ் ஆர்சிடெக்சர் (MLA-Flex Architecture)-இல் உருவாக்கப்பட்டுள்ள 2025 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் ஏர் சஸ்பென்ஷன் (Air Suspension), அடாப்டிவ் ஆஃப்-ரோடு க்ரூஸ் கண்ட்ரோல் (Adaptive off-road cruise control), ஆல்-வீல்-டிரைவ் (All-wheel drive) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 2025 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 394 பிஎச்பி மற்றும் 550 என்.எம் டார்க் திறன் வரையிலும், 3.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இந்த பெட்ரோல் & டீசல் என்ஜின்களை பிரத்யேகமாக இந்தியாவிற்கென உருவாக்குவதாக லேண்ட் ரோவர் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் ரேஞ்ச் ரோவர் கார்களுக்கும், டிஃபெண்டர் (Defender) கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால்தான், முதற்கட்டமாக ரேஞ்ச் ரோவர் கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் திட்டத்தில் லேண்ட் ரோவர் இறங்கியது. வரும் ஆண்டுகளில், ரேஞ்ச் ரோவர் கார்களுக்கான பாகங்களை கூட வெளிநாட்டில் இருந்து கொண்டுவராமல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய லேண்ட் ரோவர் துவங்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









