எலக்ட்ரிக் காரில் டாடாவை முந்த மஹிந்திரா போடும் பிளான்!! வொர்க்-அவுட் ஆகுமா?
எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மார்க்கெட் சீரான வேகத்தில் இந்தியாவில் விரிவடைந்து வருகிறது. பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, நிறைய கார் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகின்றன. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றுதான் மஹிந்திரா (Mahindra) ஆகும். இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்காக மஹிந்திரா உடன் மற்றொரு முன்னணி கார் நிறுவனம் ஒன்று கூட்டணி சேர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
எதிர்காலத்தில் சாலையெங்கிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் ஓட போகின்றன என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில், இப்போது சாலைகளில் நிறைய எலக்ட்ரிக் வாகனங்களை பார்க்க முடிகிறது. பெட்ரோல் பங்குகளை போன்று நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் வந்துவிட்டால், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை டாப் கியரில் சென்றுவிடும்.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் கார் நிறுவனம் என்று பார்த்தால், அது டாடா மோட்டார்ஸ் ஆகும். டாடாவுக்கு அடுத்து எம்ஜி எலக்ட்ரிக் கார்களை மக்கள் அதிகமாக வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மஹிந்திராவின் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் விற்பனையும் மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது, மஹிந்திரா உடன் வேறொரு முன்னணி கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்காக கூட்டணி சேர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த மற்றொரு கார் நிறுவனம் வேறு எதுவுமில்லை, ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ஆகும். 1991ஆம் ஆண்டில் இருந்து ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஒரு அங்கமாக செயல்படுவதால், இந்தியாவில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணி நிறுவனம் தற்போது மஹிந்திரா உடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளவுள்ளது. உலக அளவில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இந்த கூட்டணியில் மஹிந்திரா மற்றும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனங்கள் 50 : 50 என்கிற விகிதத்தில் கூட்டணி சேர உள்ளன.

அதாவது, கூட்டணியில் இரு நிறுவனங்களுக்கு சம பங்கு உரிமை இருக்கும். இந்த கூட்டணியின்படி, எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கான பிளாட்ஃபாரம் மற்றும் டெக்னாலஜிகளை இரு நிறுவனங்களும் பகிர்ந்துக் கொள்ள உள்ளன. இதனால், இரு நிறுவனங்களுக்கும் பலன் கிடைக்கும். அதாவது, எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கான செலவு இரு நிறுவனங்களுக்கும் குறையும்.
இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள் வெளிவரும் என கூறப்படுகிறது. எலக்ட்ரிக் கார்களுக்காக தான் இந்த கூட்டணி முக்கியமாக ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ளது என்றாலும், முதல் சில வருடங்களுக்கு பெட்ரோல்/ டீசல் கார்களையும் மஹிந்திரா மற்றும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டும் புனேவில் சாகான் என்கிற பகுதியில் தொழிற்சாலைகளை கொண்டிருப்பதும் இந்த கூட்டணிக்கு ஒரு காரணம் என சொல்லலாம். இந்த இந்திய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட உள்ளன. எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்காக மஹிந்திரா நிறுவனம் இன்ங்லோ பிளாட்ஃபாரத்தையும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எம்.இ.பி பிளாட்ஃபாரத்தையும் வடிவமைத்து ரெடியாக வைத்துள்ளன.
முன்னதாக, ஐரோப்பாவில் இருந்து செயல்படும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் சிஇஓ கிளாஸ் ஜெல்மர், இந்திய நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். கார்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவுகளை பகிர்ந்துக் கொள்ள ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் வேறொரு இந்திய நிறுவனத்தை தேட ஆரம்பித்துவிட்டது என்பது அவரது பேட்டியில் இருந்து தெரிந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே நகரத்தில் செயல்படுவதால் இரு நிறுவனங்களுக்கும் போக்குவரத்து செலவு பெரிய அளவில் மிச்சமாகும். எலக்ட்ரிக் கார்களை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்கிற பேட்டர்னையும் இரு நிறுவனங்களும் தயார் நிலையில் வைத்துள்ளதால் கூட்டணி சேர்ந்துவிட்டால் தொடர்ச்சியாக எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்களை பார்க்கலாம். அவ்வளவுதான்! கிட்டத்தட்ட எலக்ட்ரிக் கார்களின் உலகத்திற்குள் நுழைய ஆரம்பித்துவிட்டோம்.


Click it and Unblock the Notifications









