டாடாவுக்கு பெரிய தலைவலியை கொடுக்க ரெடியாகும் மஹிந்திரா!! காரை பார்த்தால் கஸ்டமர்ஸ் குவிவார்கள் போலருக்கே...
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் மார்க்கெட்டில் புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் மற்ற எலக்ட்ரிக் கார்களை போல் இல்லாமல், அவற்றை காட்டிலும் மிகவும் மாடர்ன் தரத்தில் தோற்றத்தில் உருவாக்கப்பட உள்ளன. அவற்றுள் ஒரு மஹிந்திரா எலக்ட்ரிக் கார் மாடல் தான், பிஇ.05 (BE.05) ஆகும். இந்த நிலையில், புதிய மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் போன்ற கார் நிறுவனங்கள் எனலாம். அதேபோல், மஹிந்திராவும் தனது எதிர்கால எலக்ட்ரிக் கார் திட்டங்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. மஹிந்திராவில் இருந்து தற்போதைக்கு எக்ஸ்யூவி400 என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திராவில் வருங்காலங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்கள் படங்களுடன் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். பல்வேறு விதமான உடலமைப்புகளில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. அவற்றுள் ஒன்றுதான், மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் கார் ஆகும்.
இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் சோதனை பணிகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. சமீபத்தில் கூட, பொது சாலையில் பிஇ.05 எலக்ட்ரிக் கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்களை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதில் இருந்து இந்த எலக்ட்ரிக் காரின் அறிமுகம் நெருங்கி வருவதை உணர முடிகிறது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் காரின் அறிமுகம் வருகிற 2025ஆம் ஆண்டின் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இருக்கலாம். ஜனவரி மாதத்தில் இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால், புனேவில் உள்ள மஹிந்திராவின் தொழிற்சாலையில் பிஇ.05 எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தி பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் காரின் நீளம் 4,370மிமீ, அகலம் 1,900மிமீ, உயரம் 1,635மிமீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,775மிமீ ஆகும். டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை போன்று மஹிந்திரா பிஇ.05 எலக்ட்ரிக் காரும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், டாடா மோட்டார்ஸில் பணியாற்றிய பிரதாப் போஸ் தான் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரையும் டிசைன் செய்துள்ளார்.

முன்பக்கத்தில் C-வடிவில் விளக்குகள், ஷார்ப்பான ஆங்கிள்ஸ், ஸ்கூப் உள்ளிட்டவற்றுடன் தரையில் இருந்து கொஞ்சம் உயரமாக மஹிந்திரா பிஇ.05 வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப அளவில் நன்கு பெரியதான அலாய் சக்கரங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் காரின் வெளிப்பக்கத்தில் நிறைய இடங்களில் பியானோ கருப்பு நிறத்தை மஹிந்திரா பயன்படுத்தி உள்ளது.
பிஇ.05 எலக்ட்ரிக் காருக்கு உள்ளே தாழ்வான விண்ட்ஸ்க்ரீன் லைன் மற்றும் தட்டையான டேஸ்போர்டு வழங்கப்பட்டுள்ளன. இது டிரைவருக்கு சிறந்த சாலை பார்வையை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த எலக்ட்ரிக் காரில் பொருத்துவதற்கான எலக்ட்ரிக் மோட்டாருக்காக ஃபோக்ஸ்வேகன் உடன் மஹிந்திரா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பின் சக்கரங்கள் மூலமாக இயங்கக்கூடியதாக மஹிந்திரா பிஇ.05 இருக்கும் என நினைக்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் புதிய பிஇ.05 எலக்ட்ரிக் கார் டாடா மோட்டார்ஸின் கர்வ் இவி எலக்ட்ரிக் காரை தான் டார்க்கெட் செய்து களமிறக்கப்பட உள்ளது என்பது பார்த்தாலே தெரிகிறது. இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், 2025 ஜனவரி அளவிற்கு மிகவும் விரைவாக வந்துவிடும் என்பதை எதிர்பார்க்கவில்லை. காரின் விலை தான் முக்கியமானது; அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









