மஹிந்திராவின் புது கேம் சேஞ்சர் கார் - விற்பனை பயங்கர ஸ்பீடா சூடுப்பிடிக்குது!!
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டாடா மோட்டார்ஸை போன்று முழுக்க முழுக்க இந்தியாவை சார்ந்த கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற சில வெளிநாடுகளிலும் தனது கார்களை விற்பனை செய்கிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் 4வது பெரிய நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா கடந்த 2024 மே மாதத்தில் அதன் கார்களை எத்தனை யூனிட்கள் விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நடந்து முடிந்த 2024 மே மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 43,218 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 31.43% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 32,883 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்திலும் 41,008 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

கடந்த சில வருடங்களாக மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காராக முதலிடத்தை பிடித்து வருவது ஸ்கார்பியோ ஆகும். ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான வெர்சன்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டையும் சேர்த்து கடந்த மே மாதத்தில் மொத்தம் 13,717 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
ஆனால், 2023 மே மாதத்தில் 9,318 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 4,399 ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மே மாதத்திற்கு முந்தைய 2024 ஏப்ரல் மாதத்தில் 14,807 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

ஸ்கார்பியோவுக்கு அடுத்து அதிகம் விற்கப்பட்ட மஹிந்திரா காராக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ 2வது இடத்தை சொந்தமாக்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கேம் சேஞ்சராக பார்க்கப்படும் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ சரியாக 10,000 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, 10,000 எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்களை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் என டார்க்கெட்டை நிர்ணயித்து மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
2023 மே மாதத்தில், அந்த சமயத்தில் விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 கார் 5,125 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 ஏப்ரல் மாதத்தில் இதனை காட்டிலும் குறைவாக, 4,003 எக்ஸ்யூவி300 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. மஹிந்திராவின் புத்தம் புதிய காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கடந்த மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக 3வது இடத்தில் பொலேரோ உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 9,537 பொலேரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 8,026 பொலேரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தார் இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 5,750 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 4,296 தார் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்று மஹிந்திரா ஆறுதல் அடைந்தாலும், 2024 ஏப்ரல் மாதத்தில் 6,160 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 5வது இடத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் 5,008 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இவை இல்லாமல், 701 எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார்களையும், 16 மராஸ்ஸோ கார்களையும் கடந்த மே மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் நம்பர் ஒன் மஹிந்திரா காராக ஸ்கார்பியோ விளங்கினாலும், வரும் மாதங்களில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ அந்த இடத்தை பிடித்துவிடும். எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த ஜூன் மாதத்திலேயே எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் விற்பனை புதிய உச்சத்தை தொடும். அதேநேரம், மஹிந்திராவின் ஒரேயொரு எலக்ட்ரிக் காராக விளங்கும் எக்ஸ்யூவி400 இவி-இன் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









