டாடா மட்டுமல்ல சீன நிறுவனம் எம்ஜிகூட விலையை குறைச்சிருச்சு! மஹிந்திரா குறைக்குமா? இந்த கேள்விக்கான பதில் இதோ
இந்தியாவின் முன்னணி மின்சார வாகன (EV) உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் எம்ஜி (MG) ஆகிய இரண்டு நிறுவனங்களும் அவர்களின் எலெக்ட்ரிக் கார்களின் விலையைக் குறைத்து சமீபத்தில் நடவடிக்கை எடுத்தன. பேட்டரி செல்களின் விலை சரிவைச் சந்தித்ததை அடுத்து இந்த நடவடிக்கையை அவை எடுத்தன.
இதன் விளைவாக டாடாவின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களான நெக்ஸான்.இவி மற்றும் டியாகோ இவி ஆகியவற்றின் விலை ரூ. 1.20 லட்சம் விலை குறைந்திருக்கின்றது. இதேபோல், எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்களான கோமெட் மற்றும் இசட்எஸ் இவி-யின் விலைகளும் லேசாகக் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர். மேலும், இதேபோல் மற்ற நிறுவனங்களும் அதன் எலெக்ட்ரிக் கார்களின் விலையைக் கணிசமாக குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் முன் வைத்தனர். இந்த மாதிரியான சூழலில் இந்தியாவின் மற்றுமொரு புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமாக மாறி இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமோ இதுபோன்ற எந்தவொரு விலை குறைப்பையும் தங்கள் நிறுவனம் செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.
அதேவேளையில், இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஓர் தகவல் இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் சமீபத்திலேயே அதன் ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்யூவி 400இவி-யை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. அறிமுகமாக அதற்கு ரூ. 15.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆனால், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்படாத எக்ஸ்யூவி 400இவி-யோ ரூ. 15.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைச் செய்யப்பட்டது. இதைவிட ரூ. 50 ஆயிரம் குறைவான விலையிலேயே புதிய எக்ஸ்யூவி 400இவி விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையாலேயே நிறுவனத்திடம் தற்போது விலை குறைப்பிற்கான எந்த ஐடியாவும் இல்லை என நம்மால் அறிய முடிகின்றது.
இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 இவி எனும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதனுடன் இன்னும் பல எலெக்ட்ரிக் கார் மாடல்களை அது விற்பனையில் இணைக்க இருக்கின்றது. இதற்கான பணிகளிலேயே நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி இரண்டு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, ஈசி ப்ரோ (EC PRO) மற்றும் ஈஎல் (EL PRO) ஆகும். இதில் இஎல் ப்ரோ ட்ரிம்மில் மட்டுமே இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஒன்றில் 34.5 kWh பேட்டரி பேக்கும், மற்றொன்றில் 39.4 kWH பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.
இந்த இரண்டும் 7.2 kW ஏசி சார்ஜர் டைப் வசதிக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆரம்ப நிலை தேர்வான இசி ப்ரோவில் 34.5 kWH பேட்டரி பேக் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. இத்துடன், டைப் 3.3 kW ஏசி சார்ஜிங் வசதி வழங்கப்படுகின்றது.
மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை மிகுந்த பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. அந்தவகையில், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், காப்பர் நிற தையல்களால் தைக்கப்பட்ட லெதர் உறையுடன் வழங்கியிருக்கின்றது. இதுதவிர, 10.25 தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நேவிகேஷன், மல்டிமீடியா தகவல், டிரைவர் அசிஸ்டன் டேடா ஆகியவற்றுடன் சேர்த்து 50க்கும் மேற்பட்ட இணைப்பு வசதியையும் இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. டயர் பிரஷ்ஷர் அலர்ட், கதவு திறக்கும் அலர்டு, ஓவர் ஸ்பீடு அலர்ட், ஜியோ ஃபென்ஸ் அலர்ட், அதிக டெம்ப்ரேச்சர் குறித்து எச்சரிக்கும் வசதி, இ-கால், ரோட் சைடு அசிஸ்டன்ஸ், ஷேர் மை லொகேஷன் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.
ரேஞ்ஜைப் பொருத்த வரை பெரிய பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷன் ஓர் முழு சார்ஜில் 456 கிமீ ரேஞ்ஜையும், சிறிய பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷன் 375 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. ஃபன், ஃபாஸ்ட், ஃபியர்லெஸ் ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் காரின் விலையைக் குறைக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அதேவேளையில், எக்ஸ்யூவி 400 இவியின் விலையை வரும் மே 31க்கு பின்னர் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், அதற்கு முன்னதாகவே இந்த காரை வாங்குபவர்கள் விலையுயர்வில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









