பைக்கை விட கம்மியான விலையில் புது எலக்ட்ரிக் ஆட்டோ... கை நிறைய இலாபம் பார்க்க நினைப்பவர்களுக்காக!!
மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபைலிட்டி லிமிடெட் (Mahindra Last Mile Mobility Limited), இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் 3-வீலர் நிறுவனமான இதன் வரவேற்புமிக்க எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் இ-ஆல்ஃபா (e-Alfa) ஆகும். இந்த நிலையில், ஆல்ஃபா எலக்ட்ரிக் ஆட்டோவில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-ஆல்ஃபா பிளஸ் (e-Alfa Plus) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஆட்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை உள்பட கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமாக மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபைலிட்டி லிமிடெட் (MLMML) விளங்குகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் 3-வீலர் நிறுவனமாக இது உள்ளது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் இ-ஆல்ஃபா எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

எந்த அளவிற்கு என்றால், இதுவரையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மஹிந்திரா இ-ஆல்ஃபா எலக்ட்ரிக் ஆட்டோவை வாங்கியுள்ளனர். இந்த நிலையில், மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிய இ-ஆல்ஃபா பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கூறிய கருத்துகளின் படி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ஆனது நகர்புறம் மற்றும் கிராம புறம் என இரு விதமான பயண சூழலுக்கும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன மேக்னெட் எலக்ட்ரிக் மோட்டார் இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகப்பட்சமாக 2600 ஆர்பிஎம் வேகத்தில் 1.95 கிலோவாட்ஸ் பவரையும், 200 ஆர்பிஎம் வேகத்தில் 26.9 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் 150 ஆம்பியர் ஈய அமில பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, மோட்டாருக்கு இந்த பேட்டரி தான் ஆற்றலை வழங்கும்.
இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 100க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் புதிய இ-ஆல்ஃபா பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோவுக்கு 18 மாத உத்தரவாதத்தை அறிவித்துள்ளது. இதில், வாகனத்திற்கான சார்ஜர் மற்றும் பேட்டரி உள்ளிட்டவை அடங்குகின்றன. இது இல்லாமல், மஹிந்திரா அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான விபத்து இன்ஸ்சூரன்ஸை 3 வருடத்திற்கு வழங்குகிறது.

கடலின் நீலம் உள்பட மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் புதிய மஹிந்திரா இ-ஆல்ஃபா பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோ கிடைக்கும். இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ நேர்த்தியான தோற்றத்தை கொண்டிருப்பதுடன், அட்வான்ஸ்டு பிரக்கிங் சிஸ்டம் போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. புதிய மஹிந்திரா இ-ஆல்ஃபா பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,61,113 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது நொய்டா எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறக்கூடும். அதுமட்டுமின்றி, ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் புதிய மஹிந்திரா இ-ஆல்ஃபா பிளஸ் விற்பனைக்கு கிடைக்காது. மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபைலிட்டி லிமிடெட் நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மஹிந்திரா & மஹிந்திராவின் துணை நிறுவனமான இது முழுக்க முழுக்க கமர்ஷியல் போக்குவரத்துக்கான 3-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்கிறது.
இந்த நிறுவனத்தில் இருந்துதான் மஹிந்திரா ஜீடோ 4-வீலரும், ஆல்ஃபா ஆட்டோவும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. சமீப காலமாக, எலக்ட்ரிக் வாகனங்களில் MLMML நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, இ-ஆல்ஃபா, ஸோர் கிராண்ட் மற்றும் டிரியோ எலக்ட்ரிக் ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது புதியதாக இ-ஆல்ஃபா பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மஹிந்திரா இ-ஆல்ஃபா பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோ ஆனது பயணிகளை அழைத்து செல்வதற்கு மட்டுமின்றி, சரக்கு பொருட்களையும் கொண்டு செல்லும் வகையில் நன்கு அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கில் ஆட்டோ வாங்க நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருபவர்கள் புதிய மஹிந்திரா இ-ஆல்ஃபா பிளஸ் ஆட்டோவை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








