ரூ93,000 தள்ளுபடி வழங்கியும் இந்த காரை யாருமே வாங்கல! இருக்குற ஸ்டாக்கை விற்கவே திண்டாடுறாங்க!
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எஸ்யூவி செக்மென்ட் காரை விற்பனை செய்வதில் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் வாகனங்களான ஸ்கார்பியோ, பொலிரோ, தார் ஆகிய கார்களுக்கான விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எம்பிவி செக்மெண்டில் இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ஒரு காரின் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ காரின் விற்பனை தான் ஒவ்வொரு மாதமும் சரிந்து கொண்டே வருகிறது. இந்த கார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்தாலும், மக்களிடம் போதிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருந்து வருகிறது. இது எம்பிவி கார் என்பதால் பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கை இல்லாவிட்டாலும் மற்ற போட்டி கார்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைவான எண்ணிக்கையிலே இந்த கார் விற்பனையாகி வருகிறது.

கடந்த ஆறு மாதங்களாக இந்த கார் ஒவ்வொரு மாதமும் 100 எண்ணிக்கையில் கூட விற்பனையாகவில்லை. கடந்த ஆறு மாதங்களில் அதிகபட்சமாக டிசம்பர் மாதம் தான் 62 கார்கள் விற்பனையாகி உள்ளன. நவம்பர் மாதம் 49 கார்களும், ஜனவரி மாதம் 32 கார்களும் .பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் தலா 51 கார்களும் விற்பனையாகி உள்ளன.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தான் மிகக் குறைவான எண்ணிக்கையில் இந்த கார் விற்பனையாகியுள்ளது. ஏப்ரல் மாதம் வெறும் 20 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மொத்தமே 265 கார்கள் தான் விற்பனையாகி உள்ளன. அதாவது மாதம் சராசரியாக 44 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

இந்த காரின் விற்பனை சரிவிற்கு மிக முக்கியமான காரணம் நீண்ட ஆண்டுகளாக இந்த கார் அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் மார்க்கெட்டில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்ப அம்சங்கள் எதுவும் இந்த காரில் இடம் பெறாது. மஹிந்திரா நிறுவனமும் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள இந்த கார்களை விற்று தீர்க்கவே தற்போது முயற்சி செய்து வருகிறது. இதை அப்டேட் செய்யும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் இல்லை.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு ரூபாய் 93200 வரை தள்ளுபடிகளை வழங்கியது. இந்த காரில் உள்ள மூன்று வேரியன்டிற்கும் இந்த தள்ளுபடிகள் வழங்கப்பட்டது. நேரடி கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி என தள்ளுபடிகள் வழங்கப்பட்டிருந்தன. இது மட்டுமல்லாமல் இந்த காரை வாங்குபவர்களுக்கு ரூபாய் 20,000 மதிப்பிலான ஆக்சஸரீஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டது.

இவ்வளவு வழங்கப்பட்டு இந்த காரின் விற்பனை பெரிய அளவில் இல்லை. வெறும் 20 பேர் மட்டுமே இந்தியா முழுவதும் ஒரு மாதத்தில் இந்த காரை வாங்கி உள்ளார்கள். மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ காரை பொறுத்தவரை எம்2,எம்4 ப்ளஸ் மற்றும் எம்6 ப்ளஸ் ஆகிய மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் விலையை பொறுத்தவரை ரூபாய் 14.39 லட்சம் முதல் ரூபாய் 16.80 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 121 எச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜி்ன் நேரடியாக 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. மேலும் இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களாக ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக இந்த காருக்குள்ளே 7 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் செய்கிறது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த எம்பிவி காரின் விற்பனை மட்டும் சரிவை சந்தித்து வருகிறது. மஹிந்திரா நிறுவனம் இந்த காரை முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









