இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
மஹிந்திரா டிராக்டர்கள் (Mahindra Tractors) விற்பனை எண்ணிக்கை வெற்றிக்கரமாக 40 இலட்சத்தை கடந்துள்ளது. எத்தனை வருடங்களில் இந்த மைல்கல்லை மஹிந்திரா நிறுவனம் எட்டியுள்ளது என்பதையும், இந்தியாவில் மஹிந்திரா டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் மிக பெரும் தனியார் குழுமமான மஹிந்திரா க்ரூப்பில் ஓர் அங்கமாக மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் உள்ளது. பெயருக்கு ஏற்ப இந்த நிறுவனத்தில் இருந்து முற்றிலுமாக டிராக்டர்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், டிராக்டர்கள் விற்பனையில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் வெற்றிக்கரமாக 40 இலட்சம் என்கிற இமாலய மைல்கல்லை கடந்துள்ளது.

மஹிந்திரா டிராக்டர்ஸின் 40 இலட்சமாவது டிராக்டராக மஹிந்திரா யுவோ டெக் பிளஸ் என்கிற டிராக்டர் உற்பத்தி பணிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்திற்கு தெலுங்கானா மாநிலம், ஜாகீராபாத்தில் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. மஹிந்திரா குழுமத்தின் மிக இளமையான தொழிற்சாலை இதுவாகும்.
இந்த தொழிற்சாலையை 2013ஆம் ஆண்டில் மஹிந்திரா திறந்தது. இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டு 10 வருடங்கள் ஆகிவிட்டாலும், மஹிந்திரா க்ரூப்பின் கீழ் செயல்படும் இளமையான தொழிற்சாலை அஇதுவாகும். மஹிந்திரா டிராக்டர்கள் வெளிநாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் மஹிந்திரா டிராக்டர்கள் பெரும்பாலும் இந்த ஜாகீராபாத்தில் உற்பத்தி செய்யப்பட்டவையே.
மஹிந்திராவின் 40 இலட்சமாவது டிராக்டராக வெளிவந்துள்ள யுவோ டெக் பிளஸ் டிராக்டருக்கு ஒரு சிறப்பு உள்ளது. அதாவது, இந்த டிராக்டரை நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் யுவோ டிராக்டர் பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் வடிவமைத்தது. மஹிந்திரா டிராக்டர்கள் 1963ஆம் ஆண்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதாவது, முதல் மஹிந்திரா டிராக்டர் 1963ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால், அந்த சமயத்தில் டிராக்டர்கள் உற்பத்தியில் மஹிந்திரா நிறுவனத்தால் தனித்து செயல்பட முடியவில்லை. அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. 10 இலட்ச டிராக்டர்களை உற்பத்தி செய்ய மஹிந்திரா நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட 41 வருடங்கள் தேவைப்பட்டது.
ஆம், 2004ஆம் ஆண்டில்தான் டிராக்டர்கள் உற்பத்தியில் 10 இலட்சத்தை மஹிந்திரா டிராக்டர்ஸ் கடந்தது. அதன்பின், 2009ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் விவசாய டிராக்டர்களை விற்பனை செய்த பெருமையை மஹிந்திரா பெற்றது. முதல் 10 இலட்ச டிராக்டர்களை உற்பத்தி செய்ய 41 வருடங்கள் தேவைப்பட்டாலும், அடுத்த 10 இலட்ச டிராக்டர்களை வெறும் 9 வருடங்களில் மஹிந்திரா உற்பத்தி செய்துவிட்டது.
30 இலட்ச மஹிந்திரா டிராக்டர்கள் உற்பத்தியை 2019ஆம் ஆண்டில் பூர்த்தி அடைந்தது. அதாவது, 20 இலட்சத்தில் இருந்து 30 இலட்சத்தை 6 வருடங்களில் மஹிந்திரா எட்டியது. அதன்பின், 40 இலட்ச டிராக்டர்கள் உற்பத்தியை தற்போது இந்த 2024ஆம் ஆண்டில், அதாவது வெறும் 5 வருடங்களில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் கடந்துள்ளது. கடந்த 1 வருடத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் 10 இலட்ச மஹிந்திரா டிராக்டர்களை உற்பத்தி செய்ய 41 வருடங்கள் ஆனதில் இருந்து, தற்போது 5 வருடங்களில் இந்த டார்க்கெட்டை மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் எளிதாக முறியடிக்கிறது என்றால், மஹிந்திரா டிராக்டர்களுக்கு மார்க்கெட்டில் எந்த அளவிற்கு தேவை உள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications








