மொத்தமும் மெட்டல்!! டொக்கு விழுவதற்கு வாய்ப்பே இல்ல... மஹிந்திராவின் புது எலக்ட்ரிக் ஆட்டோ!
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் அதன் ட்ரியோ பிளஸ் (Treo Plus) எலக்ட்ரிக் ஆட்டோவில் புதியதாக மெட்டல் பாடி ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஆட்டோவான மஹிந்திரா ட்ரியோ பிளஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஆப்ஷனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெட்ரோல்/ டீசல் வாகனங்களில் இருந்து மக்கள் மெதுவாக எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களில் எலக்ட்ரிக்கை கொண்டுவர வேண்டுமெனில், அதற்கு முன் கமர்ஷியல் வாகனங்களில் எலக்ட்ரிக்கை புகுத்துவது அவசியமாகும்.

எலக்ட்ரிக் ஆட்டோகளை பயன்படுத்துவது அதற்கான ஒரு வழியாகும். எலக்ட்ரிக் ஆட்டோகளை உற்பத்தி செய்வதில் முதன்முதலாக மஹிந்திரா நிறுவனம் ஈடுப்பட ஆரம்பித்தது. இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஆட்டோவாக மஹிந்திரா ட்ரியோ பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்ற எலக்ட்ரிக் ஆட்டோவில் ஒன்று ட்ரியோ பிளஸ் ஆகும்.
இருப்பினும், ட்ரியோ பிளஸ் ஆட்டோவை உலோகத்திலான பாடி உடன் விற்பனை செய்ய கஸ்டமர்கள் பலரிடம் இருந்து மஹிந்திராவுக்கு பரிந்துரைப்புகள் வந்தன. இதனை அடுத்தே, மஹிந்திரா நிறுவனம் அதே ட்ரியோ பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோவை மெட்டல் பாடி ஆப்ஷனில் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய ட்ரியோ பிளஸ் மெட்டல் பாடி எலக்ட்ரிக் ஆட்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.58 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு பல்வேறு அட்டகாசமான ஃபினான்சியல் உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஆட்டோவிற்கான மாதத்தவணையில் மாதங்களின் எண்ணிக்கை 60 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்த முன் தொகை உடன் ஆட்டோவிற்கான தொகையில் சுமார் 90%-ஐ மாதத்தவணை திட்டங்களில் கடனாக பெறலாம்.
2018இல் முதன்முதலாக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் உற்பத்தியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுப்பட ஆரம்பித்தது. மஹிந்திராவில் இருந்து முதல் எலக்ட்ரிக் ஆட்டோவாக ட்ரியோ அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே கூறியதுபோல், இதுதான் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஆட்டோ ஆகும். தற்போதைய நிலவரப்படி, 50 ஆயிரத்துக்கும் அதிகமான மஹிந்திரா ட்ரியோ எலக்ட்ரிக் ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ட்ரியோ எலக்ட்ரிக் ஆட்டோகளில் 10.24kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியின் மூலமாக ஆட்டோவில் அதிகப்பட்சமாக 8 கிலோவாட்ஸ் மற்றும் 42 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். ட்ரியோ ஆட்டோக்களில் அதிகப்பட்சமாக 150கிமீ வரையிலான ரேஞ்ச் கிடைக்கிறது.
மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவில் முன் சக்கரத்துக்கும், பின் சக்கரங்களுக்கும் இடையேயான தூரம் 2073மிமீ ஆகும். இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதியும் கிடைக்கிறது. புதிய ட்ரியோ பிளஸ் மெட்டல் பாடி எலக்ட்ரிக் ஆட்டோவுக்கு 5 வருட மற்றும் 12 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை மஹிந்திரா வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஆட்டோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மெட்டல் பாடியில் ட்ரியோ பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோ வெற்றி பெற்றால், இதே பாணியில் மற்ற எலக்ட்ரிக் ஆட்டோக்களையும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications









