மிடில்-கிளாஸ் குடும்பத்துக்கு ஏற்ற எலக்ட்ரிக் கார்... மஹிந்திரா உருவாக்குகிறது என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல் தான்!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் மாடர்ன் காராக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு கஸ்டமர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் எலக்ட்ரிக் வெர்சனையும் விரைவில் விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா தயாராகி வருவது தற்போது உறுதியாகி உள்ளது. அப்படி என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றியும், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்று, மஹிந்திராவும் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக உள்ளது. இதன் மூலம், மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விரைவில் புது, புது எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதில் ஒன்று, எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி என்கிற எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும்.

'மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி' - இப்படியொரு எலக்ட்ரிக் கார் மஹிந்திராவில் இருந்து வெளிவரும் என சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், மஹிந்திராவில் இருந்து ஏற்கனவே எக்ஸ்யூவி400 என்கிற எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, எக்ஸ்யூவி400 காரை விட எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி கார் அளவில் சிறியதாக இருக்கும்.
குறிப்பாக, எக்ஸ்யூவி400 காரை விட இந்த புதிய எலக்ட்ரிக் கார் சுமார் 200மிமீ வரையில் நீளம் குறைவானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி ஆனது இந்த காரில் அளவில் சிறியதாக கிடைக்குமாம். ஆனால், இவை இரண்டுமே விற்பனையில் டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும்.

எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் கார் விஷயம் தற்போது வெளிவந்திருப்பதன் காரணம், மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் ஒன்று சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் முன் & பின் பகுதிகள் மட்டுமே மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, இவ்வாறு காரின் முன் & பின் பகுதிகள் மட்டும் மறைக்கப்படுகிறது என்றால், அந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் வர போகிறது என்று அர்த்தம். அதாவது, காரின் தோற்றம் முழுவதுமாக மாற்றப்படாமல், முன் & பின் பகுதிகள் மட்டும் மாற்றப்படுவதை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என அழைக்கின்றனர். ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆகுவதால், அதற்குள் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை.
ஆதலால், இது எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தற்போது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சோதனை காரில் முன்பக்க கிரில் பகுதி மூடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்களில்தான் இவ்வாறு கிரில் பகுதியை மூடி வைப்பார்கள். இருப்பினும், இந்த சோதனை எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் கிரில் பகுதி முழுவதுமாக மூடப்படவில்லை; பாதியளவு மட்டுமே மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கும், அதன் புதிய எலக்ட்ரிக் மாடலுக்கும் இடையே தோற்றத்தில் சிறு, சிறு வித்தியாசங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹெட்லைட் செட்அப் மற்றும் எல்இடி டிஆர்எல்-களின் வடிவங்களில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு என பிரத்யேகமான பெயிண்ட் ஆப்ஷன்களை மஹிந்திரா வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்துவருவது என்னமோ உண்மைதான். இருப்பினும், தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும் இரு கார்களை விற்பனை செய்வது மஹிந்திராவுக்கு எந்த அளவிற்கு பயன்தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், இதன் மூலமாக மஹிந்திரா நிறுவனத்திற்கு கார் உற்பத்தி செலவு பெரியளவில் குறையும்.


Click it and Unblock the Notifications








