மாருதி 800 வரலைனா மார்க்கெட் இந்த அளவுக்கு மாறி இருக்காதா! ஸ்கூட்டருல-தான் டிராவல் பண்ணிட்டு இருந்திருப்போமா!!
இந்தியா தனது 78 வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக சில சுவாரஷ்ய தகவல்களை நாம் சமீப சில நாட்களாக நம்முடைய டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பார்த்து வருகின்றோம். அந்தவகையில், இந்தியாவின் ஆட்டோத்துறையை வலுப்படுத்த பெரும் உதவியாக இருந்த மாருதி 800 கார் மாடலை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இப்போது, வேண்டுமானால் இந்தியா வாகனங்களுக்கான மாபெரும் சந்தையாக வளர்ச்சியடைந்துக் காணப்படலாம். ஆனால், இதற்கு வித்திட்டது மாருதி 800 என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் பலரின் முதல் கார் மாடல் இதுவே ஆகும். இதனால்தான் இந்திய வாகன உலகின் ஓர் சின்னமாகவே மாருதி 800 கார் மாடல் மாறி உள்ளது. குறிப்பாக, 1980-களில் இந்தியாவில் கார் வைத்திருப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல.

அவை மிகவும் ஆடம்பரமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஃபியட் மற்றும் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் ஆகிய கார்கள் மட்டுமே சந்தையில் விற்பனைக்குக் கிடைத்தன. இவற்றின் விலையும் சற்று அதிகம் ஆகும். இந்த நிலையிலேயே மாருதி 800 இன் அறிமுகம் இந்தியாவில் அரங்கேறியது. சற்று குறைவான விலையே இந்த காருக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆகையால், முன்னதாக வசதி படைத்தவர்களால் மட்டுமே காரை வாங்க முடியும் என்றிருந்த நிலை, இதன் வருகையால் மாறியது. வந்த விரைவிலேயே இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாகவும் மாருதி 800 மாறியது. சிறிய உருவம், இலகுவான எடை மற்றும் ஓட்டுவதற்கும், பராமரிப்பதும் கூட எளிதாக இருந்த காரணத்தினால் பலரின் கவனத்தை இந்த கார் கவர்ந்தது.
கூடுதலாக, இது சிறந்த மைலேஜையும் வழங்கியது. சொல்லவா வேண்டும், இந்த ஒன்றே போதும் இந்தியர்களை வளச்சு போட. இதற்கேற்பவே அது சந்தையை மிகப் பெரிய அளவில் தன் வசம் வளைத்து போட்டது. குறிப்பாக, பஜாஜ் ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்தவரையும் தன் வசம் இந்த கார் வளைத்து போட்டது.
மேலும், இதற்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பைப் பார்த்தே மற்ற நிறுவனங்களும் இந்தியாவில் அதன் கால் தடத்தைப் பதிக்கத் தொடங்கின. மாருதி நிறுவனம் இந்த காருக்கான புக்கிங்கை 1983 ஏப்ரல் 9 இல் தொடங்கியது. இது தொடங்கியதும் மிகுந்த ஆர்வத்துடன் இந்தியர்கள் இந்த காரை புக் செய்தனர்.
சுமார் 1 லட்சம் இந்திய வாடிக்கையாளர்கள் ரூ. 10 ஆயிரம் செலுத்தி இந்த காரை புக் செய்தனர். மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் அதாவது, ஜூன் 8 ஆம் தேதி இந்த புக்கிங் எண்ணிக்கை 1.35 லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்தது. இவை அனைத்தும் அட்வான்ஸ்டு புக்கிங்குகள் ஆகும்.
இந்த அளவிற்கே அமோக வரவேற்பை நாட்டில் மாருதி 800 பெற்றது. நடுத்தர மக்கள் மட்டுமல்ல பெரிய பெரிய பணக்காரர்களும் இந்த காரை அதிகளவில் புக் செய்தனர் என்பது கவனிக்கத்தகுந்தது. சொல்லப்போனால் மக்கள் இந்த காரை சொந்தமாக்க மிகவும் ஆர்வமாக இருந்தனர். அன்றைய கால கட்டத்தில் மாருதி 800 இன் விலை ரூ. 52,500 ஆக மட்டுமே இருந்தது.
இது டெல்லியில் விற்கப்பட்ட விலையாகும். இதன் டெலிவரி பணிகள் 1983 டிசம்பர் 14 அன்று சஞ்சய் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட்டது. மேலும், முதல் பத்து மாருதி 800 கார்களை அதன் உரிமையாளர்களிடத்தில் பிரதமர் இந்திரா காந்தியே வழங்கினார். மாருதி 800 கார் வாங்குவதற்காக தனது ஃபியட்- காரை விற்ற இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர் ஹர்பால் சிங்-கே முதல் நபராக இந்த காரை பெற்றார்.
மாருதி உத்யோக் லிமிடெட், அப்போது பொதுத்துறை நிறுவனமாக இருந்தது. நாளடைவில் இந்த குட்டி காரின் மாபெரும் வெற்றி பிராண்டை மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ச்சியடையச் செய்தது. இந்த அபார வெற்றியை அடுத்து, நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா, "மாருதி மிக பெரிய தோல்வியடையும் என்று எல்லோரும் நினைத்தார்கள், ஆனால், அது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்கிற கருத்தை முன் வைத்தார்.
மேலும், மாருதி 800 தன்னுடைய முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு புதுப்பித்தல்களைப் பெற்றது. இந்த கார் 1986-87-லேயே அதன் முதல் ஒரு லட்சம் யூனிட் உற்பத்தியை எட்டியது. இதற்கு அடுத்தபடியாக 1992-93 இல் ஐந்து லட்சம் யூனிட்களை அது எட்டியது.
தொடர்ந்து, 1996-97இல் பத்து லட்சம் யூனிட்டுகள் என்கிற இரட்டிப்பான உற்பத்தியை அது எட்டியது. இதோடு நில்லாமல், 1999-2000 வாக்கில் பதினைந்து லட்சம் யூனிட் உற்பத்தியை அது தொட்டது. அடுத்ததாக, 2002-03ல் இருபது லட்சம் யூனிட்களையும், 2005-06இல் 25 லட்சம் யூனிட்களையும் அது தாண்டியது.
இதற்கிடையில் பல்வேறு போட்டிகளை இந்த கார் மாடல் நாட்டில் சந்தித்து. லட்ச ரூபாய்க்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட டாடா நானோ, மாருதி 800இன் ஆணி வேரை அசைத்து பார்க்க முயற்சித்தது. இருப்பினும், அதனால் 800 இடத்தை எட்ட முடியவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நானோவின் வருகைக்கு பின்னரும் சிறப்பான விற்பனையை மாருதி 800 பெற்றது.
இத்தகைய காரையே மாருதி 2014 இல் நிறுத்த முடிவெடுத்தது. கடுமையான பிஎஸ் 4 (BS4) மாசு உமிழ்வு விதி மற்றும் பாதுகாப்பு விதி உள்ளிட்டவற்றின் காரணமாகவே இந்த காரை மாருதி சுஸுகி பின் வாங்கியது. இப்போது அந்த கார் விற்பனையிலேயே இல்லாத நிலை உருவாகி இருக்கின்றது. இதற்கு பதிலாக ஆல்டோ கே10 எனும் கார் மாடலே சந்தையில் விற்பனையில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி 800 இந்திய வாகன உலகின் வரலாற்றா முழுமையாக மாற்றியமைத்த கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இப்போது இந்த காரை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்தாலும், இந்தியர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்றே நம்பப்படுகின்றது. அதேவேளையில், இந்தியர்கள் தற்போது எஸ்யூவி கார் பிரியர்களாக மாறிவிட்டனர். ஆகையால், இது லட்சக் கணக்கில் விற்பனையாவது கொஞ்சம் சந்தேகமே.


Click it and Unblock the Notifications








