மாருதி ஆல்டோ கே10 கார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி! உடனே இதை செஞ்சிடுங்க!
மாருதி நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த ஆல்டோ கே10 காரில் ஸ்டெயரிங் கியர் பாக்ஸ் அசெம்பிளியில் பிரச்சனை இருப்பதாக கூறி 2555 கார்களை திரும்ப அழைத்துள்ளது. இப்படியாக திரும்ப அழைக்கப்பட்ட கார்களில் உள்ள பிரச்சனைகளை இலவசமாக சரி செய்து வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே10 என்ற காரை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் அப்டேட் செய்து வெளியிட்டது. பழைய மாடலில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானது. இந்த கார் மாருதி நிறுவனத்தின் மினி செக்மெண்டில் விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. மாருதி நிறுவனம் எஸ்-பிரெஸ்ஸோ என்ற காரையும் விற்பனை செய்து வருகிறது.

மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10 இந்தியாவிலேயே குறைந்த விலையில் விற்பனையாகி வரும் கார் என்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். முதல் தலைமுறை கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரை தான் தேர்வு செய்கிறார்கள். இதனால் மாருதி நிறுவனம் முதல் காரை ஒரு குடும்பத்திற்கு விற்பனை செய்து அவர்கள் நன்மதிப்பை பெறும் நிறுவனமாக இருக்கிறது.
இந்நிலையில் மாருதி நிறுவனம் நேற்று திடீரென புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாருதி நிறுவனம் ஏற்கனவே தயாரித்து விற்பனை செய்த ஆல்டோ கே10 காரில் 2555 காரில் ஸ்டேரிங் கியர் பாக்ஸ் அசெம்பிளியில் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளது. இதையடுத்து இந்த கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்ப அழைத்துள்ளது.

அந்நிறுவனம் தெரிவித்துள்ளது படி இந்த கார்களை விற்பனை செய்த வாடிக்கையாளர்களை நிறுவனம் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களிடம் விஷயத்தை எடுத்து கூறி உடனடியாக காரை மாருதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான சர்வீஸ் சென்டர் வர சொல்லி கேட்கிறது. அங்கு இந்த அசெம்பிளி சோதனை செய்யப்பட்டு அதில் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அதை இலவசமாக மாற்றி தர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஆல்டோ கே 10 காரை வாங்கியவர்களுக்கு இந்த பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கப்பட்டால் அவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையுடன் தொடர்ந்து வாகனத்தை ஓட்ட வேண்டாம் எனவும் மாருதி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் நீங்கள் மாருதி ஆல்டோ கே10 காரை பயன்படுத்தி வரும் நபராக இருந்தால் உங்கள் காரில் இப்படியான பிரச்சனை இருக்கிறதா என்பதை உடனே செக் செய்து கொள்ளுங்கள். அப்படி பிரச்சனை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு சென்று அதை சரி செய்யுங்கள். உங்களுக்கு பிரச்சனை இருப்பது தெரியாவிட்டாலும், சர்வீஸ் சென்டரில் இருந்து உங்களுக்கு போன் கால் வந்தாலும் உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள்.
மாருதி நிறுவனம் இப்படியாக ஏற்கனவே விற்பனை செய்த கார்களை திரும்ப அழைப்பது ஒன்றும் புதிதல்ல, இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனம் எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ஈக்கோ மாடலில் மொத்தம் 87,599 வாகனங்களை திரும்ப அழைத்தது. இதில் ஸ்டீயரிங் டை ராடு பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டு அது சரி செய்யப்பட்டது.
அதேபோல கடந்த மார்ச் மாதம் 11,851 பலேனோ காரையும் 4,190 வேகன் ஆர் காரையும் திரும்ப அழைத்தது. இந்த கார்கள் எல்லாம் 2019ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்கள் ஆகும். இதில் பெட்ரோல் பம்ப் மோட்டாரில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு இந்த கார்கள் எல்லாம் திரும்ப அழைக்கப்பட்டு இது சரி செய்யப்பட்டன. தற்போது ஆல்டோ கே10 காரை மாருதி நிறுவனம் திரும்ப அழைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே10 என்ற காரை இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதால் இந்த கார் மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் மோகம் இருக்கிறது. இந்த காரில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு மாருதி நிறுவனம் திரும்ப அழைத்துள்ளது, பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நீங்கள் இந்த காரை பயன்படுத்தி வந்தால் உடனடியாக இந்த ரிப்பேரை சரி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









