குடும்பத்தோட போற மாதிரி வரப்போற மாருதி காரின் பெயர் இது தானா?
மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷனை விரைவில் வெளியிட திட்டமிட்டு வரும் நிலையில், இந்த காரின் பெயர் குறித்த தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. இப்படியாக இந்த காரின் பெயர் என்ன? இதில் உள்ள அம்சங்கள் என்ன? இந்த கார் எப்பொழுது அறிமுகம் ஆகும்? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
கடந்த 1988-ம் ஆண்டு சுஸூகி நிறுவனம் விட்டாரா என்ற பெயரில் முதன்முறையாக தனது காரை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் தற்போது 5 தலைமுறைகள் இந்த கார் மாற்றப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை கார்கள் கிராண்ட் விட்டாரா என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகின. நான்காம் தலைமுறை காரில் கிராண்ட் என்ற பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் மீண்டும் இந்த கார் தற்போது ஐந்தாம் தலைமுறையில் கிராண்ட் விட்டாரா என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் தற்போது இந்த கிராண்ட் விட்டாரா காரில் மூன்று வரிசை சீட்டர் கொண்ட காரை தற்போது தயாரித்து வருகிறது. விரைவில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த காரின் பெயர் விட்டாரா என இல்லாமல் வேறு பெயரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனம் தற்போது எஸ்குடோ மற்றும் டார்க்நேடோ என்ற இரண்டு பெயர்களை இந்தியாவில் டிரேட் மார்க் வாங்கியுள்ளது. இதனால் இந்த எஸ்குடோ என்ற பெயரை தான் அந்நிறுவனம் தனது புதிய 7 சீட்டர் கொண்ட கிராண்ட் விட்டாரா காருக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஸ்குடோ என்ற பெயர் ஏற்கனவே ஜப்பான் நாட்டில் அந்நிறுவனத்தின் காருக்கு இருக்கும் பெயர்தான்.

எஸ்குடோ என்ற வார்த்தை போர்ச்சுகல் நாட்டிலுள்ள வார்த்தையாகும். அந்நாட்டில் பயன்பாட்டில் இருந்த பணத்திற்கு எஸ்குடோ என்று தான் பெயர் வைத்திருந்தார்கள். பின்னார் அந்த எஸ்குடோ பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு தற்போது யூரோவைதான் அந்நாட்டில் அதிகாரப்பூர்வ பணமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் இந்த எஸ்குடோ என்ற பெயர்தான் மாருதி நிறுவனம் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயரை டிரேட் மார்க் செய்ததாலேயே ஒரு நிறுவனம் அந்த பெயரை தனது காருக்கு வைக்கும் என்ற எந்தவித உறுதியும் கிடையாது. அந்நிறுவனம் குறிப்பிட்ட பெயரை வேறு நிறுவனங்கள் வைக்க கூடாது என்பதற்காக அந்த பெயரை டிரேட் மார்க் வாங்கி வைத்திருக்கலாம் . எல்லாமே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் போது தான் நமக்கு உறுதியாக தெரிய வரும்.

சர்வதேச அளவிலும் கிராண்ட் விட்டாரா காரில் மூன்றாவது வரிசை சீட்டை இணைத்து மூன்று வரிசை கொண்ட எம்பிவி காராக எஸ்குடோ கார் விற்பனையாகி வருகிறது. இப்படியாக ஒரே காரில் சில மாற்றங்களை செய்து புதிய காராக அறிமுகப்படுத்தும் போது அதற்கு புதிய பெயர் வைப்பது வழக்கமாக இருக்கிறது. மாருதி மட்டுமல்லாமல் பல நிறுவனங்கள் இதை செய்துள்ளன.
மாருதி நிறுவனத்தின் இந்த எஸ்குடோ கார் விற்பனைக்கு வந்தால் மார்க்கெட்டில் உள்ள டாடா சஃபாரி, ஹுண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெட்டர் பிளஸ், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மீது தற்போதைய மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
மாருதி நிறுவனம் மற்றொரு பெயரையும் டிரேட் மார்க் செய்துள்ளது. டார்க்நாடோ என்ற பெயரை பொறுத்தவரை மாருதி நிறுவனத்தின் இவி காரான இவிஎக்ஸ் என்ற கார் அதிக டார்க் திறனுடன் விற்பனைக்கு வரும் என்ற கான்செப்டில் இந்தப் பெயர் அந்த காருக்கு இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எது எப்படியோ இந்த கார் 2025-ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் ஆகும்போது அனைத்து விபரங்களும் தெரியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது எம்பிவிரக கார்களுக்கு என தனி மவுசு இருக்கிறது. குடும்பத்துடன் பயணிக்கும் பலர் எம்பிவி ரக கார்களை விரும்பி வாங்குகிறார்கள். இந்நிலையில் கிராண்ட் விட்டாரா காருக்கும் நல்ல மவுசு இருப்பதால் அந்த காரின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாக புது எம்பிவி கார் வந்தால் மக்கள் நிச்சயம் இந்த காரை விரும்பி வாங்குவார்கள்.


Click it and Unblock the Notifications









