தீபாவளிக்கு வாங்கும் பட்டாசுகளை எடுத்து வச்சுக்கோங்க.. ஜனவரியில் வெளியீட்டை காணும் மாருதி எலெக்ட்ரிக் கார்!
இந்தியர்களோட எதிர்பார்ப்பு மட்டுமில்லைங்க, ஒட்டுமொத்த உலகத்தோட எதிர்பார்ப்பாக மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் கார் (Maruti Suzuki Electric Car)-இன் வருகை உள்ளது. குறிப்பாக, இந்தியர்கள் இதன் வருகையை எதிர்பார்த்து மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற கேள்விக்கான பதில் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) நடைபெற இருக்கின்றது.
இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் வைத்தே மாருதி சுஸுகி அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற இருப்பக்கின்றது.

இதில் ஓர் நாளிலேயே முதல் முறையாக தன்னைக் காட்சிப்படுத்திக் கொள்ள இருக்கின்றது மாருதி சுஸுகி-யின் முதல் மின்சார கார் மாடல். இந்த தகவலை ஆட்டோ கார் இந்தியா தளமும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. 'மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே அரங்கேறிவிடும் என நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருப்பதாகவே' அது தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், மாருதி சுஸுகி முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இவிஎக்ஸ் (eVX) மாடலையே களமிறக்க இருப்பதாகவும், இந்தியாவே இந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியின் தாயகமாக விளங்கும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, இங்கு தயாரிக்கப்படும் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் உலக நாடுகள் சிலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைக்களுக்கும் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. எனவேதான், மாருதி எலெக்ட்ரிக் கார் வெளியீடு குறித்து வெளியாகியிருக்கும் தகவல் ஒட்டுமொத்த கார் ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆண்டுக்கு 1.5 லட்சம் யூனிட்டுகள் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த டாடா கர்வ் இவி (Tata Curvv EV)-க்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இதேபோல், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV)-யும் இந்த காருக்கு வரும் நாட்களில் போட்டியாக அமையும்.
மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை போலவே ஒய்எம்சி (YMC) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் எம்பிவி (MPV) ரக எலெக்ட்ரிக் கார் மாடலாகும். இவிஎக்ஸ், எலெக்ட்ரிக் கார் பிரிவை அலங்கரிக்க இருப்பதைப் போல, இது எலெக்ட்ரிக் எம்பிவி கார் பிரிவை அலங்கரிக்கும்.
இந்த பிரிவில் இப்போதைக்கு பிஒய்டி நிறுவனத்தின் இ6 எனும் எலெக்ட்ரிக் கார் மாடல் விற்பனையில் இருக்கின்றது. இதற்கு போட்டியளிக்கும் விதமாக மாருதி சுஸுகி அதன் ஒய்எம்சி-யை விரைவில் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் எர்டிகாவை போல 6 பேர் முதல் 7 பேர் வரை பயணிக்க முடியும். ஆகையால், இரண்டு குடும்பங்கள் பயணிக்க ஏற்ற எலெக்ட்ரிக் காராகவே மாருதி ஒய்எம்சி எம்பிவி எலெக்ட்ரிக் கார் இருக்கும் என கருதப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார வாகன உலகில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கின்றது. இந்த நிறுவனமே இந்தியாவில் பரந்த அளவில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பஞ்ச் இவி, நெக்ஸன் இவி, டியாகோ இவி, டிகோர் இவி என பலதரப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களை அது நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர சமீபத்தில் புதிதாக கர்வ் இவி எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையும் அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இத்தகைய நிறுவனத்திற்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே மாருதி சுஸுகி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் நாட்டில் மின்சார கார்களை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போட்டியில் டாடாவை இவர்கள் வெற்றி காண்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








