மாருதி கார்களில் பிரச்னை... பலினோ, வேகன்ஆர் காரை வச்சிருக்கவங்களுக்கு அவசர அழைப்பு விடுத்திருக்காங்க!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் பலினோ (Baleno) மற்றும் வேகன்ஆர் (WagonR) ஆகிய கார் மாடல்களில் பிரச்னை இருப்பதாகக் கூறி அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்த அழைப்பு அனைவருக்கும் பொருந்துமா? வாங்க இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் பலினோ (Baleno) மற்றும் வேகன்ஆர் (WagonR) ஆகிய கார் மாடல்களும் அடங்கும். இரண்டு ஹேட்ச்பேக் ரக கார் மாடல்கள் ஆகும். இதில் பலினோ பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஓர் ஹேட்ச்பேக் கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த இரண்டு கார் மாடல்களுக்குதான் மாருதி சுஸுகி தற்போது அவசர அழைப்பு விடுத்திருக்கின்றது. பலினோ மாடலில் 11,851 யூனிட்டுகளுக்கும், வேகன்ஆர் கார் மாடலின் 4,190 யூனிட்டுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த யூனிட்டுகளில் ஃப்யூவல் பம்ப் மோட்டாரில் பிரச்னை இருப்பதாகக் கூறியே மாருதி சுஸுகி இந்த அவசர அழைப்பை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மிக முக்கியமாக 2019 ஜூலை 30 ஆம் தேதி தொடங்கி 2019 நவம்பர் 1 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வேகன்ஆர் மற்றும் பலினோ கார் மாடல்களிலேயே உற்பத்தி சிக்கல் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது அவசர அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அழைப்பின்கீழ் ஃப்யூவல் பம்ப் மோட்டாரில் உள்ள சிக்கல்கள் சீர் செய்யப்பட இருக்கின்றன. கட்டணமின்றி இந்த பணியை மாருதி சுஸுகி செய்துக் கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், இந்த பிரச்னை குறித்து மாருதி சுஸுகி நிர்வாகமே பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், இந்த காலகட்டத்தில் பலினோ அல்லது வேகன்ஆர் கார் மாடலை வாங்கியவர்கள் அதிகாரப்பூர்வ மாருதி சுஸுகி டீலர் அல்லது சர்வீஸ் மையத்தைத் தொடர்புக் கொண்டு அதுகுறித்துத் தெரிந்துக் கொள்ளலாம். இந்த பிரச்னையைக் கண்டுக் கொள்ளாமல் அப்படியே விடும்பட்சத்தில் வாகனத்தின் எஞ்சின் திடீரென வேலை செய்யாமல் போகுதல் அல்லது ஸ்டார்ட் ஆகுவதில் சிக்கலைச் சந்தித்தல் போன்ற இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என கூறப்படுகின்றது.
மாருதி சுஸுகி இதுபோன்று அதன் கார் மாடல்களில் தயாரிப்பு பிரச்னை இருப்பதாகக் கூறி அழைப்பு விடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று மிகப் பெரிய எண்ணிக்கையில் கார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், 2023 ஜூலை மாதத்தில் மாருதி சுஸுகி நிர்வாகம் 87599 யூனிட் எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஈகோ கார் மாடல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பிரீமியம் அம்சங்கள் நிறைந்த பலினோ ஹேட்ச்பேக் 8 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் இதில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.
இதன் சிஎன்ஜி அதிகபட்சமாக 30.61 கிமீ மைலேஜை ஒரு கிலோ சிஎன்ஜிக்கும், பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 22.35 கிமீ முதல் 22.94 கிமீ வரையிலும் மைலேஜ் தரும். நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலாக வேகன்ஆர் ஹேட்ச்பேக் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 5.54 லட்சம் ஆகும்.
இதுவும் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் மாடலிலும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்கிக் கொண்டிருக்கின்றது மாருதி சுஸுகி. இதன் பெட்ரோல் ஆப்ஷன் 24.35 கிமீ தொடங்கி 25.19 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோவிற்கு 34.05 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது. இந்த கார் மாடலில் உற்பத்தி சிக்கல் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இருப்பினும், இது வழக்கமான ஒன்றுதான் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








