மாருதிக்கா இப்படி ஒரு நிலைமை!.. இவ்ளோ மந்தமா இருக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. உற்பத்தியையே குறைச்சுட்டாங்க!
இந்தியாவின் மாபெரும் கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது, மாருதி சுஸுகி (Maruti Suzuki). இந்த நிறுவனமே தற்போது மிகப் பெரிய மந்த நிலையில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விற்பனை மந்த நிலையிலேயே அது தற்போது சிக்கி இருக்கின்றது. இதன் விளைவாக கார் விற்காமல் லட்சக் கணக்கில் ஷோரூம்களில் தேக்கமடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இதை சரி செய்யும் பொருட்டே, மாருதி சுஸுகி நிறுவனம் தன்னுடைய கார் உற்பத்தியைக் கணிசமாக தற்போது குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனம் கணித்ததைவிட 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் மிகவும் குறைவான தேவையே நாட்டில் நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வழக்கம் போல் வாகனம் தயாரிக்கப்பட்டால், வாகன இருப்பு மேலும் அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாகவே உற்பத்தியை குறைத்து இருக்கின்றது மாருதி சுஸுகி.

Source: business standard டீலர்களும் வாகனங்கள் இருப்பு அதிகரித்திருத்து வருவதாக கூறியிருக்கின்றது. இதைத்தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மாருதி சுஸுகி மட்டுமல்ல மேலும் சில வாகன உற்பத்தி நிறுவனங்களும் லேசான விற்பனை மந்த நிலையில் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) ஓர் தகவலை வெளியிட்டு இருக்கின்றது.
அது, தங்களின் உறுப்பினர்கள் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் விற்கப்படாத வாகனங்களை வைத்திருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றது. இரண்டு மாத விற்பனையை ஈடுகட்ட போதுமான யூனிட்டுகளே இவை ஆகும். அதேநேரத்தில், இந்த தகவலுக்கு மாறாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM), இந்த எண்ணிக்கையை தோராயமாக 400,000 யூனிட்கள் என மதிப்பிடுகின்றது.
எதுவாக இருந்தாலும் இந்த அளவிற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகமல் தேக்கமடைந்திருப்பது இந்திய வாகன பிரிவிற்கு கவலையளிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றது. இத்தகைய மந்த நிலையைக் கருத்தில் கொண்டே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது உற்பத்தியை அட்ஜெஸ்ட் செய்திருக்கின்றது. அதேவேளையில், விரைவில் சந்தையில் புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை தினங்கள் வர இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் வாகன விற்பனை பலமடங்கு சூடுபிடித்துக் காணப்படும். ஆகையால், இந்த சூழலைக் கருத்தில் கொண்டும் தாங்கள் கவனத்துடன் சந்தையின் தேவையை கவனித்து வருவதாக மாருதி சுஸுகி தெரிவித்து இருக்கின்றது.
இந்திய வாகன சந்தை பொதுவாக ஆண்டின் பிற்பகுதியுடன் ஒப்பிடும்போது முதல் காலாண்டில் வாகன விற்பனை மந்தமாகவே இருக்கம். ஆனால், இந்த முறை மக்களவைத் தேர்தல், கடுமையான மழை மற்றும் கடுமையான வெயில் போன்ற மோசமான வானிலை காரணங்களால் இந்த ஆண்டு கூடுதல் விற்பனைச் சரிவைச் சில நிறுவனங்கள் சந்தித்து உள்ளன.
இதன் எதிரொலியாகவே பல லட்ச கணக்கில் வாகனங்கள் விற்பனையாகமல் தேக்கமடைந்துக் காணப்படுகின்றது. 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், மாருதி சுசுகியின் உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.4 சதவீதம் அதிகரித்தது. 4,96,000 யூனிட்டுகளாகவே அதன் உற்பத்தி திறன் இருந்தது. ஆனால், விற்பனை மட்டும் 1.2 சதவீதம் மட்டுமே அதிகரித்து. 4.27 லட்சம் யூனிட்களே விற்பனையாகின. இது ஒட்டுமொத்த சந்தையில் 40 சதவீதம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய வாகன உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக மாருதி சுஸுகி காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான ஓர் நிறுவனத்திற்கா இப்படி ஒரு நிலைமை என்றே அது தற்போது சந்தித்து வரும் மந்த நிலை நம்மை கேட்கச் செய்திருக்கின்றது. விரைவில் இந்த நிலையில் இருந்து மாருதி சுஸுகி மீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








