மாருதி சுஸுகி புதிதாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ள கார் இவ்ளோ மைலேஜை தருமா!! பைக்குகளே வாயை பிளக்கும்..
இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களுக்கு டிமாண்ட் மிக அதிகம். இதனால்தான், மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் தயாரிப்புகளுக்கு நாட்டில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்ற போதிலும் டாடா (Tata)-வின் தயாரிப்புகள் மாருதியைவிட மிகப் பெரிய அளவில் விற்பனையில் பின் தங்கி இருக்கின்றன. இதன்வாயிலாக இந்தியர்கள் எந்த அளவிற்கு அதிக முக்கியத்துவத்தை அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை உங்களாலேயே உணர முடியும். மேலும், இந்த காரணங்களினால்தான் மாருதி சுஸுகியும் தொடர்ச்சியாக அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், அடுத்ததாக நிறுவனம் ஓர் 35 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் காரை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக ஃப்ரான்க்ஸ் (Fronx) உள்ளது. பலினோ (Baleno) காரை தழுவி உருவாக்கப்பட்ட ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலே இதுவாகும்.

இந்த கார் மாடலிலேயே மாருதி சுஸுகி ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்தை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் (Strong Hybrid) அம்சமே ஃப்ரான்ஸ்க் காரை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்ற இருக்கின்றது.
இப்போது விற்பனையில் இருக்கும் ஃப்ரான்க்ஸ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.1 கிமீ முதல் 22.89 கிமீ வரையில் மைலேஜ் தந்துக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இதன் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 28.51 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

இவை அனைத்தையும் மைலேஜில் வீழ்த்தக் கூடியதாக ஃப்ரான்க்ஸ்-இன் ஹைபிரிட் அம்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, சில மாநில அரசுகள் மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதைப் போலவே ஹைபிரிட் கார்களின் விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகி ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட ஃப்ரான்க்ஸ் கார் மாடலை அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மாருதி சுஸுகி நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த காரை அறிமுகம் செய்துவிடும் என்பது தெரிய வந்துள்ளது.
ஆகையால், அடுத்த ஆண்டின் நிறுவனத்தின் முதல் அறிமுகமாக ஹைபிரிட் அம்சம் கொண்ட ஃப்ரான்க்ஸ் இருக்கும் என தெரிகின்றது. ஏற்கனவே விற்பனையில் இந்த கார் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றது. விற்பனைக்கு வந்த முதல் ஏழு மாதங்களிலேயே இந்த கார் மாடல் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை எட்டியது.
இதுமட்டுமில்லைங்க, இது ஏற்கனவே 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த இலக்கை அது சமீபத்திலேயே எட்டியது. அதாவது, விற்பனைக்கு வந்த 17 மாதங்களிலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க விற்பனை எண்ணிக்கையை ஃப்ரான்க்ஸ் எட்டியது. இதன் வாயிலாக இந்தியாவில் மிக வேகமாக விற்பனையாகும் எஸ்யூவி கார் என்கிற புகழுக்கும் ஃப்ரான்க்ஸ் ஆளாகியது.
இந்த கார் இப்போது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், சமீபத்திலேயே இக்காரை ஜப்பானிலும் சுஸுகி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் ரூ. 7.51 லட்சம் தொடங்கி 12.87 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த கார் மாடலில் ஏற்கனவே கூறியதைப் போலவே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகம் மைலேஜிற்கு இந்தியர்கள் மிகப் பெரிய அடிமை என்பதை உணர்ந்தே இந்த மாருதி சுஸுகி அந்த திறனைக் கொண்டே நம்மவர்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும், தன்னுடைய சந்தையை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தொடர்ச்சியாக அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றது.


Click it and Unblock the Notifications








