ஸ்விஃப்ட், டிசையர் இடத்துல இருக்க வேண்டிய கார் இது.. மார்க்கெட்டுல இப்ப இருந்த தடயமே இல்லாம போச்சு!
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார் மாடல்களில் ஸ்விஃப்ட் (Swift) மற்றும் டிசையர் (Dzire), இந்த இரண்டு கார் மாடல்களும் அடங்கும். இந்த கார் மாடல்கள் இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு கார் மாடல் இருக்க வேண்டும் என சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா. மாருதியால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, தற்போது சந்தைக்கு வந்த தடையமே இல்லாமல் போன கார் மாடலே கிசாஷி (Kizashi). இந்த கார் மாடலும் மாருதி சுஸுகியின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலில் ஒன்றாக இருக்க வேண்டிய ஒன்று.
ஆனால், இது விற்பனைக்கு வந்ததற்கான சுவடுகூட இல்லை. அந்த அளவிற்கே மாபெரும் தோல்வியை இந்த கார் இந்திய சந்தையில் சந்தித்து இருக்கின்றது. மிக அதிகளவிலான ஆடம்பர அம்சங்கள் மற்றும் பிரீமியம் அம்சங்களை தாங்கிய காராக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டபோதிலும் இந்த கார் சந்தையில் மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.

அதன் விளைவாகவே வந்த வேகத்திலேயே அது சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த காரின் தோல்விக்கு பின்னால் இருந்த காரணங்கள் என்ன மற்றும் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் இந்த கார் இந்திய சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
கடுமையான போட்டி: சந்தையில் ஏற்பட்ட கடுமையான போட்டியே கிசாஷி வெளியேற்றத்திற்கான மிக முக்கியமான காரணம் ஆகும். மேலும், மாருதி சுஸுகிக்கு பிராண்டிற்கு சற்றும் பொருத்தமில்லா காராகவும் இது இருந்தது. பொதுவாக, மாருதி சுஸுகியின் தயாரிப்பு என்றாலே அதிகம் மைலேஜை வழங்கக் கூடியதாக இருக்கும்.

ஆனால், இந்த கார் அதிக செயல்திறன்மிக்கதாகக் கொண்டு வரப்பட்டது. இதுவும் இந்த செடான் கார் விற்பனையில் பின் தங்க முக்கிய காரணமாக அமைந்தது. இதுதவிர, மற்றுமொரு மிகப் பெரிய சிக்கலாக இந்த கார் சிபியூ (Completely Built Unit) வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
ஜப்பானில் இருந்தே இந்த கார் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக விலையிலும் அது உயரிய கார் மாடலாகவே காட்சியளித்தது. இவை அனைத்தும் மாருதி சுஸுகிக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதை நாம் இங்கே மீண்டும் நினைவுக்கொள்ள வேண்டும். இவையே, கிசாஷியை அதன் போட்டியாளர்களிடம் தோற்க செய்தது.
டீசல் ஆப்ஷன் வழங்கப்படவில்லை: மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய மாருதியின் கிசாஷி கார் தவறிவிட்டது என்றே கூறலாம். கடுமையான மாசு உமிழ்வு மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை காரணமாக வேண்டுமானால் இப்போது டீசல் வாகன விற்பனைக்குக் குறைந்துக் காணப்படலாம். ஆனால், கடந்த நாட்களில் டீசல் கார்களுக்கு இந்தியாவில் மாபெரும் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருந்தது.
இந்த மாதிரியான சூழலிலேயே டீசல் எஞ்சின் ஆப்ஷனே இல்லாமல் கிசாஷி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதுவும் அந்த கார் இந்தியாவில் தோல்வியுற்றதற்கான மற்றுமொரு முக்கியமான காரணம் ஆகும். அதேவேளையில், இதில் கொடுக்கப்பட்டு இருந்து எஞ்சின் அதிக பவர்ஃபுல்லானதாக இருந்தது. இதன் காரணத்தினால் அதிக ஆற்றலை விரும்பும் கார் விரும்பிகளின் கவனத்தை மட்டுமே இந்த கார் மாடல் கவர்ந்தது. இருப்பினும், அதுவும் அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை.
கிசாஷி வாயிலாக மிக பெரிய பாடம் கற்றுக் கொண்ட மாருதி சுஸுகி: கிசாஷி அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த காரை தயார் செய்திருந்தாலும், அது இந்தியர்களைக் கவரவில்லை. இதன் வாயிலாக பல பாடங்களை மாருதி சுஸுகி கற்றுக் கொண்டது. குறிப்பாக, டீசல் ஆப்ஷனுக்கு முக்கியம் வழங்க வேண்டும், உல்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்க வேண்டும், பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்பது போன்ற பல்வேறு பாடங்களை அது கற்றுக் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதும் இந்தியாவில் டீசல் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டீசல் கார்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை காரணமாக மக்கள் தானாக பெட்ரோல் வாகன பயன்பாட்டிற்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த மாதிரியான சூழல் நிலவுகின்ற இந்த சூழலில் கிசாஷி விற்பனைக்கு வரும் என்றால் கணிசமான அளவு நல்ல வரவேற்பை இந்தியர்களிடத்தில் அக்கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb), ஃபோக்ஸ்வேகன் பசாட் (Volkswagen Passat) மற்றும் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் (Toyota Camry Hybrid) ஆகிய கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இந்த கார் முன்னதாக 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








