பொம்மை கார்கள் கூட இத்தனை உற்பத்தி ஆகாது!! மாருதி கார்களுக்கு பயங்கர டிமாண்ட்... ஃபேக்ட்ரி பெரிதாகுது!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹரியானாவில் மனேசர் என்கிற பகுதியில் உள்ள அதன் கார்கள் உற்பத்தி தொழிற்சாலையில் புதிய அசெம்பிளி லைனை திறந்துள்ளது. இதன் மூலமாக மாருதி சுஸுகியின் இந்த தொழிற்சாலையில் கார்கள் உற்பத்தி திறன் 9 லட்சம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம் மாருதி சுஸுகி என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி சுஸுகியை சொல்லலாம். ஒவ்வொரு மாதத்திலும் 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சம் கார்களை இந்திய மார்க்கெட்டில் அசால்ட்டாக மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த வகையில் பார்த்தால், ஒவ்வொரு வருடத்திலும் ஏறக்குறைய 20 லட்சம் கார்கள் மாருதி சுஸுகியில் இருந்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அளவிற்கு கார்களை விற்பனை செய்ய முடிகிறது என்றால், அந்த அளவிற்கு மாருதி சுஸுகியிடம் கார்கள் உற்பத்தி திறனும் உள்ளது என்று அர்த்தம். இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகிக்கு சொந்தமாக தொழிற்சாலைகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ளன.
தொழிற்சாலைகள் மட்டுமின்றி, ஆய்வு & கண்டுப்பிடிப்பு மையங்களும் மாருதி சுஸுகியின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இவற்றில் முக்கியமானது, ஹரியானா மாநிலத்தில் மனேசர் என்கிற பகுதியில் உள்ள மாருதி சுஸுகியின் கார்கள் உற்பத்தி தொழிற்சாலை ஆகும். ஏனெனில், இந்த உற்பத்தி தொழிற்சாலை வருடத்திற்கு வருடம் விரிவடைந்து கொண்டே போகிறது.

இதன் காரணமாக, கார்கள் உற்பத்திக்கு மாருதி சுஸுகி பெரிதும் சார்ந்திருக்கும் தொழிற்சாலையாக இந்த மனேசர் தொழிற்சாலை வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில், மாருதி சுஸுகியின் மனேசர் தொழிற்சாலையில் புதிய அசெம்பிளி லைன் திறக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய அசெம்பிளி லைனினால் தொழிற்சாலையின் மொத்த உற்பத்தி திறன் 1 லட்ச யூனிட்கள் அதிகரித்துள்ளது.
அதாவது, மாருதி சுஸுகியின் மனேசர் தொழிற்சாலையில் வருடத்திற்கு அதிகப்பட்சமாக 8 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 9 லட்சமாக அதிகரித்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய அசெம்பிளி லைனில் மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி ரக காராக எர்டிகா விளங்குகிறது.

எர்டிகாவை தொடர்ந்து மற்ற மாருதி சுஸுகி கார்களும் எதிர்காலத்தில் இந்த புதிய அசெம்பிளி லைனில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. மனேசர் தொழிற்சாலையை மாருதி சுஸுகி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது. அந்த சமயத்தில், தொழிற்சாலையில் ஏ பிளாக் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தது.
அதன்பின், பி பிளாக் மற்றும் சி பிளாக் உள்ளிட்டவை முறையே 2011 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் திறக்கப்பட்டன. இதுவரையில், மனேசர் தொழிற்சாலையில் சுமார் 95 லட்சத்திற்கும் அதிகமான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. மனேசர் தொழிற்சாலையில் தற்சமயம் எர்டிகா, எக்ஸ்.எல்6, பிரெஸ்ஸா, வேகன் ஆர், டிசைர், எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் செலேரியோ உள்ளிட்ட கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், மாருதி சுஸுகியின் மனேசர் தொழிற்சாலையில் இந்த புதிய அசெம்பிளி லைன் தற்போதைக்கு முழுவதுமாக எர்டிகா கார்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட உள்ளது. ஏனெனில், எர்டிகா எம்பிவி கார்களுக்கு தற்சமயம் பலத்த டிமாண்ட் உருவாகி வருகிறது. குறிப்பாக, எர்டிகா சிஎன்ஜி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









