மக்கள் தலையில் இடியை இறக்கீட்டாங்க! கார் வாங்கற ஆசையை மூட்ட கட்டி வெச்சிட்டு வேற வேலைய பாக்க வேண்டியதுதான்!
2025 புத்தாண்டு (2025 New Year) பிறக்க இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. 2025ம் ஆண்டில் புதிதாக சொந்த காரை வாங்கி விட வேண்டும் என்ற ஆசையுடன், பலரும் புத்தாண்டை எதிர்நோக்கி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி கொண்டுள்ளன. ஆம், இந்திய சந்தையில் பல்வேறு கார் நிறுவனங்களும் விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்கள் எல்லாம் ஏற்கனவே விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
சொகுசு கார் நிறுவனங்கள்தான் விலையை உயர்த்துகின்றன என்று பார்த்தால், ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது. இந்த வரிசையில் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் (Maruti Suzuki) தற்போது இணைந்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 3.99 லட்ச ரூபாய் (ஆல்டோ கே10 ஆரம்ப நிலை வேரியண்ட்) முதல் 29 லட்ச ரூபாய் (இன்விக்டோ டாப் வேரியண்ட்) வரையிலான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு, அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2025 புத்தாண்டு முதல் புதியதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை வாங்க வேண்டும் என விரும்பினால், நீங்கள் 4 சதவீதம் வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ, வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய ஹேட்ச்பேக் ரக கார்களையும், டிசையர் செடான் ரக காரையும், எர்டிகா எம்பிவி ரக காரையும், பிரெஸ்ஸா எஸ்யூவி ரக காரையும், ஈக்கோ வேனையும் விற்பனை செய்து வருகிறது.
இவை அனைத்தும் அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி கார்கள் ஆகும். மறுபக்கம் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக இக்னிஸ், பலேனோ, சியாஸ், எக்ஸ்எல்6, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி, க்ராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் கண்டிப்பாக இத்துடன் நிற்க போவதில்லை. எஞ்சிய கார் நிறுவனங்களிடம் இருந்தும் வரும் நாட்களில் விலை உயர்வு குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று பல்வேறு டூவீலர் நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புகள் உள்ளன. எனவே புத்தாண்டில் புதிய வாகனம் வாங்க வேண்டுமென்றால், கூடுதல் தொகையை செலவு செய்ய தயாராகி கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








