365 நாட்களில் 20 லட்சம் கார்களை தயாரித்து வரலாற்றையே மாற்றி எழுதியிருக்காங்க.. டாடாவோ, மஹிந்திராவோ கிடையாதுங்க
365 நாட்களில் 20 லட்சம் யூனிட் கார்களை தயாரித்து பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று சாதனைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வேறு யாரும் இல்லைங்க, இந்தியர்களின் பிரியமான கார் உற்பத்தி பிராண்டுகளில் ஒன்றான மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யே அதுவாகும். இந்த நிறுவனமே 2024 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், 2 மில்லியன், அதாவது, 20 லட்சம் யூனிட்டுகள் கார்களை தயாரித்து வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்திருக்கின்றது.
இந்த அளவு அதிக எண்ணிக்கையில் ஒற்றை ஆண்டிற்குள் எந்த ஒரு வாகன உற்பத்தி நிறுவனமும் கார்களை தயாரித்தது இல்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. ஏன் மாருதி சுஸுகி-யே இதற்கு முன்னதாக இந்த அளவு அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் கார்களை தயாரித்து இல்லை.

ஆகையால், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு 2024 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக அமைந்திருப்பது உறுதியாகி இருக்கின்றது. 20 லட்சமாவது யூனிட்டாக மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புகழ்பெற்ற எர்டிகா எம்பிவி ரக கார் மாடலையே உற்பத்தி செய்து வெளியேற்றி இருக்கின்றது.
மேலும், ஹரியானா மாநிலத்தில் உள்ள மனேசர் கார் உற்பத்தி ஆலையிலேயே இந்த 20 லட்சமாவது வாகனம் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகளில் அதிக எண்ணிக்கையில் கார்களை தயாரிக்கும் ஆலையாக மனேசர் தொழிற்சாலை இருக்கின்றது. அதேவேளையில், மாருதி சுஸுகிக்கு ஹரியானாவில் மட்டும் இரண்டு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
குஜராத்திலும் ஒன்று உள்ளது. மொத்தமாக நிறுவனத்திற்கு மூன்று ஆலைகள் நாட்டில் உள்ளன. இவை அனைத்தின் ஒட்டுமொத்த கார் உற்பத்தி திறன் ஆண்டு ஒன்றிற்கு 2.35 மில்லியன் ஆகும். இந்த 20 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தியில் 60 சதவீதம் ஹரியானாவில் உள்ள ஆலைகளில் வைத்தே தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.
மீதமுள்ள 40 சதவீதம் மாருதி சுஸுகியின் குஜராத் ஆலையில் வைத்து தயாரிக்கப்பட்டு உள்ளன. எனவே நிறுவனத்தின் கார் புரடெக்சனில் மிகப் பெரிய பங்களிப்பை ஹரியானாவில் உள்ள ஆலை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் பலதரப்பட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், மிக மிக அதிகமாக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் பலினோ (Baleno), ஃப்ரான்க்ஸ் (Fronx), எர்டிகா (Ertiga), வேகன்ஆர் (WagonR) மற்றும் பிரெஸ்ஸா (Brezza) உள்ளிட்டவையே இருக்கின்றன. இந்த கார் மாடல்களே 2024 ஆம் ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றிற்கு அடுத்தபடியாகவே, எஸ்-பிரஸ்ஸோ (S-Presso), கிராண்ட் விட்டாரா (Grand Vitara), எக்ஸ்எல்6 (XL6), ஆல்டோ கே10 (Alto K10), செலிரியோ (Celerio), ஈகோ (EECO), ஸ்விஃப்ட் (Swift), டிசையர் (Dzire), இக்னிஸ் (Ignis), ஜிம்னி (Jimny) மற்றும் இன்விக்டோ (Invicto) உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றன.
அதேவேளையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் இந்தியாவில் மட்டுமே விற்பனைச் செய்யப்படவில்லை. உலக நாடுகள் பலவற்றிற்கு இங்கு இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. நிறுவனம் இந்தியாவில் இருந்து 100க்கும் அதிகமான நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் விளைவாகவும் அதனால் 365 நாட்கள் எனும் குறுகிய நாட்களில் 2 மில்லியன் கார்கள் உற்பத்தி எனும் சாதனையைப் படைக்க முடிந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்த சந்தையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டிருக்கின்றது. நிறுவனம், இந்த 2024 ஆம் ஆண்டை 20 லட்சத்திற்கும் அதிகமான வாகன உற்பத்தி எனும் சாதனையுடன் நிறைவு செய்திருப்பது போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்ன்றது. அடுத்தடுத்து வரும் ஆண்டுகளிலும் இதுமாதிரியான பல்வேறு சாதனைகளை மாருதி சுஸுகி இந்தியாவில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








