முழுக்க முழுக்க நம்ம இந்தியர்கள் உருவாக்கும் பென்ஸ் கார்!! எல்லாமே நம் நாட்டிலேயே கிடைக்குது!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவின் முன்னணி லக்சரி கார் நிறுவனம். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் நம்பர் ஒன் இடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற அக்டோபர் 9ஆம் தேதி 6வது தலைமுறை லாங்-வீல்பேஸ் இ-கிளாஸ் (LWB E-Class) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், இந்த மாடர்ன் பென்ஸ் காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் பணிகளை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக ஒரு கார் விற்பனைக்கு வருகிறது என்றாலே அனைவரது கவனமும் அதன் மீதுதான் இருக்கும். குறிப்பாக, பணக்காரர்கள் உடனே புக் செய்ய தயாராகிவிடுவார்கள். ஆனால், புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் லாங்-வீல்பேஸ் இ-கிளாஸ் காருக்கு வழக்கத்தை காட்டிலும் சற்று அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், பொதுவாகவே மெர்சிடிஸின் இ-கிளாஸ் கார்களுக்கு கடந்த காலங்களில் இருந்தே நல்ல டிமாண்ட் உள்ளது. அதிலிலும், புதிய இ-கிளாஸ் கார் லாங்-வீல்பேஸ் வெர்சனாக வருவது செல்வந்தர்கள் பலரது ஆசையை தூண்டியுள்ளது. அதாவது, காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் அதிகமாக இருக்கும். அதற்கேற்ப இந்த காரின் நீளமும் அதிகமாகும்.
இதன் விளைவாக, காருக்கு உள்ளேயும் விசாலமான இடவசதியை எதிர்பார்க்கலாம். இத்தகைய கார் வருகிற அக்டோபர் 9ஆம் தேதி சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த பென்ஸ் காரை உற்பத்தி செய்யும் பணிகள் இந்தியாவில், புனேவில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸின் தொழிற்சாலையில் துவங்கப்பட்டு, முதல் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் அசெம்பிள் லைனில் இருந்து வெளியே வந்துள்ளது.

இதனை படங்கள் உடன் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்டிங்-எட்ஜ் ரோபோட்கள், இண்டெலிஜண்ட் ஆட்டோமேட்டிக் டெக்னாலஜிகள் உதவியுடன் புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரை உருவாக்குவதாக தெரிவிக்கும் மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரில் புதியதாக செண்டர் ஏர்பேக்கை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது, விபத்தின்போது ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணி இருவரும் மோதிக் கொள்ளாமல் இருக்க இந்த ஏர்பேக்கை மெர்சிடிஸ் அறிமுகம் செய்கிறது.
டிரைவர் இருக்கையின் குஷினுள் இந்த ஏர்பேக் மறைத்து வழக்கப்படவுள்ளது. இத்துடன், நவீன டெக்னாலஜி உடன் எம்பக்ஸ் (MBUX) சூப்பர்-ஸ்க்ரீனையும் புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் தனது டேஸ்போர்டில் பெற்றுவர உள்ளது. இதன் மூலமாக டிரைவர் காரை பற்றி தனக்கு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளும் அதேநேரம், முன் இருக்கை பயணி கேம்ஸ், டிவி நிகழ்ச்சிகள், வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கலாம்.

மேலும், இந்த சூப்பர் ஸ்க்ரீனின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், முன் இருக்கை பயணி மேற்கூறப்பட்ட பொழுதுப்போக்கு அம்சங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அது எந்த விதத்திலும் டிரைவரின் கவனத்தை சிதறடிக்காத விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காருக்கான புக்கிங்குகள் ஏற்கனவே துவங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 194 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவிற்கு வருவது 6வது தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் ஆகும். இந்த காரை இதுவரையில் எத்தனை பேர் புக் செய்துள்ளனர் என்கிற விபரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை. அது வெளியான பின்பே புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காருக்கு எத்தகைய டிமாண்ட் உள்ளது என்பதை அறிய முடியும். இந்த காருக்கான விலையை அறிய அக்.9ஆம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









