சொன்ன மாதிரியே நடக்குதே! வாடகை டாக்ஸிலயே வாழ்க்க போயிருமா சார்? இனி சொந்த கார் வாங்கறது கஷ்டம்தான்!
சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் நீண்ட நாள் கனவு. இந்த கனவை வரும் 2025ம் ஆண்டில் நிறைவேற்றி விட வேண்டும் என்று நிறைய பேர் தீவிரமாக உழைத்து வருகின்றனர். இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பல்வேறு கார் நிறுவனங்களும் விலைகளை அதிரடியாக உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. எனவே 2025ம் ஆண்டில் புதிய கார் வாங்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு கொண்டிருந்தால், சற்று அதிகமான தொகையை தற்போதே பட்ஜெட்டில் ஒதுக்கி கொள்வது நன்மை பயக்கும்.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகிய இந்தியாவின் 2 முக்கியமான கார் நிறுவனங்களும் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளன. இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.

ஆம், எம்ஜி மோட்டார் நிறுவனம் விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய சந்தையில் எம்ஜி கார்களின் விலை 3 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வானது வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்து கார்களுக்கும் பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மொத்தம் 6 கார்களை விற்பனை செய்து வருகிறது.

அவை எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி அஸ்டர் (MG Astor), எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster), எம்ஜி கோமெட் இவி (MG Comet EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகியவை ஆகும்.
இதில், முதல் 3 கார்களும் ஐசி இன்ஜின் மாடல்கள் ஆகும். எஞ்சிய 3 கார்களும் எலெக்ட்ரிக் கார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனக்கென தனி இடத்தை எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீப கால அளவில் பிடித்து கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு கடுமையான சவாலை எம்ஜி மோட்டார் நிறுவனம் வழங்க தொடங்கியுள்ளது. இந்த ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்ளும் வகையில் எம்ஜி சைபர்ஸ்டர் இவி (MG Cyberster EV) எலெக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எம்ஜி சைபர்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார் வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு கார் நிறுவனங்களும் தொடர்ச்சியாக விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம். அது அப்படியே நடக்க தொடங்கியுள்ளது. ஆனால் இது இத்துடன் நிற்க போவதில்லை. இன்னும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தும் விலை உயர்வு குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் நடப்பு டிசம்பர் மாதத்திலேயே வாங்கி விடுவது நல்லது. புதிய கார் வாங்கும் முடிவை நீங்கள் ஜனவரி மாதத்திற்கு கொண்டு சென்றால், சற்று அதிகமான தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications








