போர்ஷேவையே மூச்சு திணற வைக்க போறாங்க.. இந்திய-சீன நிறுவனம் இணைந்து 544BHP திறனுடைய காரை அறிமுகம் செய்ய போறாங்க
இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW)-வும், சீன நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஜி மோட்டார் (MG Motor)-ம் கூட்டணி மேற்கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் மாருதி சுஸுகி-யை போல செயல்பட திட்டமிட்டு இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி மோட்டார் கூட்டணி மிகவும் குறைவான விலையில் இந்தியாவிற்கான முதல் சியூவி ரக கார் மாடல் விற்பனைக்குக் கொண்டு வந்தன. விண்ட்ஸர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் கார் மாடலையே அவர்கள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
இந்த நிலையிலேயே ஜேஎஸ்டபிள்யூ-வும், எம்ஜி மோட்டாரும் இணைந்து இந்தியாவில் மற்றுமொரு அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சைபர்ஸ்டர் (Cyberster) எனும் கார் மாடலையே அது விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

போர்ஷே 718 பாக்ஸ்டர் (Porsche 718 Boxster)-க்கு போட்டியாகவே இந்த கார் மாடலை எம்ஜி தயார் செய்திருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் (Electric Convertible Sportscar) வகை கார் மாடல் ஆகும். சென்ற ஆண்டே இந்த காரை எம்ஜி உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்தே தற்போது இந்தியாவிலும் அதை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது. வருகின்ற மார்ச் 2025 ஆம் ஆண்டிலேயே அது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் போர்ஷே 718 பாக்ஸ்டர் போன்ற அனைத்து சூப்பர் வகை கார்களுக்கும் மிகப் பெரிய போட்டியாக அமையும்.

மேலும், விலையும் மிகப் பெரிய அளவில் குறைவாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ரூ. 60 லட்சம் தொடங்கி ரூ. 80 லட்சம் வரையிலான விலையிலேயே அவை விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே மற்ற நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு மிக பெரிய போட்டியாக இதன் வருகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விலை குறைவாகவே இருக்கின்றது, திறன் வெளிப்பாடு மற்றும் பிறவற்றில் இதன் தன்மை குறைவாக தானே இருக்கும் என நீங்கள் கேட்கலாம். ஆனால், அதுதான் இல்லை. இந்த விஷயத்திலும் அது சிறந்ததாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. டூயல் எலெக்ட்ரிக் மோட்டார், 77 kWh எனும் பெரிய பேட்டரி பேக் ஆகியவற்றுடனேயே இது உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

அதாவது, இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 544 பிஎச்பி மற்றும் 725 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இத்துடன் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறன் போன்றவையும் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகின்றது. மேலும் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இதுமட்டுமில்லைங்க வெறும் 3.1 செகண்டுகளிலேயே அது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லக் கூடிய காரையே எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது.
மேலும், ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் காரில் 580 கிமீ தூரம் பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது. ஆகையால், திறனை வெளிப்படுத்துவது, ரேஞ்சை தருவது மற்றும் கவர்ச்சியான தோற்றம் என அனைத்திலும் மிக சிறந்த காராகவே இது இருக்கும் என தெரிகின்றது.
தொடர்ந்து, இந்த காரில் சிறிய பேட்டரி பேக் மற்றும் குறைந்த ஆற்றலை வெளிப்படுத்தும் ஆப்ஷனும் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 64 kWh பேட்டரி பேக் மற்றும் 310 பிஎச்பி - 335 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் ஆப்ஷன்களே அதில் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்த காரை பிரத்யேகமாக எம்ஜி நிறுவனம் புதிய ஷோரூம் வாயிலாகவே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதாவது, மாருதி சுஸுகி எப்படி தன்னுடைய அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனங்களை நெக்ஸா எனும் ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றதோ, அதைபோலவே எம்ஜி நிறுவனம் எம்ஜி செலக்ட் எனும் ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
எம்ஜி நிறுவனம் சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமல்ல இன்னும் பல கார் மாடல்களை இந்த எம்ஜி செலக்ட் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஓர் டீசர் படத்தையும் அது வெளியிட்டிருந்தது. எம்ஜி செலக்ட் ஷோரூம் வெளியே இரண்டு கார்கள் போர்வைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது போன்ற படமே வெளியிடப்பட்டு இருக்கின்றது.
இந்த எம்ஜி செலக்ட் ஷோரூம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே அமைக்கப்பட இருக்கின்றது. அந்தவகையில், முதலில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, மும்பை, புனே, சூரத், கொல்கத்தா, சண்டிகர், அஹமதாபாத் மற்றும் குருகிராம் உள்ளிட்ட நகரங்களிலேயே முதல் கட்ட எம்ஜி செலக்ட் ஷோரூம்கள் அமைக்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடனான கூட்டணிக்கு பிறகு மிகப் பெரிய பிளானை இந்தியாவிற்காக தயார் செய்திருக்கின்றது. அது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஓர் புதுமுக வாகனத்தை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றோம் என்கிற கமிட்மென்டையே கொடுத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









