இந்தியாவிற்காக மெடலை வாங்கினா நாங்க கார் தருவோம்.. சீன நிறுவனம் அதிரடி! எப்படியாச்சும் மெடலை அடிச்சிருங்க!
சீன நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம், இந்திய சந்தையில் வெகு விரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை அறிமுகம் செய்வதற்கான பணியிலேயே நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, தீவிர சாலை சோதனையோட்டத்திற்கு அந்த கார் மாடல் உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த காரின் பெயர்கூட சமீபத்திலேயே உறுதி செய்யப்பட்டது. எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV) எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வரவிருக்கின்றது.
இந்த காரையே இந்தியாவிற்காக மெடல் பெற்று தரும் வீரர்களுக்கு பரிசாக வழங்க இருப்பதாக எம்ஜி நிறுவனம் தற்போது அறிவித்து இருக்கின்றது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024-இல் ஏற்கனவே இந்தியாவிற்கு 3 வெண்கல பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த நிலையிலேயே கார் பரிசு என்கிற அறிவிப்பை எம்ஜி நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

இந்த தகவலை ஜேஎஸ்டபிள்யூ குழுமம் சார்பாக சஜின் ஜிண்டல் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்க பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றார். இந்த கார் பரிசளிப்பு அவர்களை மேலும் கௌரவிக்கும் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, நிறுவனம் வீரர்களின் சாதனைகளை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் விளையாட்டுக்காக அது வழங்கும் ஆதரவையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்கிற முயற்சியின் கீழ் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், ஜேஎஸ்டபிள்யூ உடனான தன்னுடைய கூட்டணியை அது சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இதுதவிர, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஓர் புதுமுக காரை நாட்டில் அறிமுகம் செய்வதையும் அது இலக்காகக் கொண்டிருக்கின்றது.
தன்னுடைய இந்த பிளானின் ஒரு பகுதியாகவே விரைவில் விண்ட்ஸர் இவி-யை எம்ஜி விற்பனைக்குக் கொம்டு வர இருக்கின்றது. இது ஓர் சியூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் சியூவி பிரிவில் விற்பனைக்கு வர இருக்கும் முதல் கார் மாடல் இதுவே ஆகும்.
ஏற்கனவே, எம்ஜி நிறுவனம் இந்தியாவில் இசட்எஸ் இவி (ZS EV) மற்றும் கோமெட் இவி (Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதுவும் இந்த காரின் மீது இந்தியர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமாக உள்ளது.
செடான் ரக காரில் காணப்படும் வசதியை எஸ்யூவி காரில் பெறுவதைப் போன்ற ஓர் ரகமே இந்த சியூவி ஆகும். அதேவேளையில், உருவத்தில் இது எஸ்யூவி கார்களுக்கே டஃப் கொடுக்கும். குறிப்பாக, அதிக லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் வசதிக் கொண்ட காராகவும் விண்ட்ஸர் இவி இருக்கும் என கூறப்படுகின்றது.
எம்ஜி-யின் இந்த தயாரிப்பு ஏற்கனவே சர்வதேச அளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கிளவுட் இவி (Cloud EV) என்கிற பெயரிலேயே அது விற்கப்படுகின்றது. சமீபத்திலேயே இந்த கார் இந்தோனேசியா ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் இரண்டு பக்கங்களிலும் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுதவிர, நேர்த்தியான ஹெட்லைட்கள், வெளிப்பக்கத்தை முழுமையாக பார்க்க பரந்த பார்வை திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவற்றை எம்ஜி விண்ட்ஸர் தன்னுள் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, சோபா போன்ற இருக்கைகளையும் இந்த கார் உள்ளடக்கியிருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், நிறைய லக்கேஜ்களை ஏற்றி செல்ல ஏதுவாக இந்த காரில் உள்ள இருக்கைள் பெரும்பாலானவற்றிற்கு மடித்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல தனித்துவமான அம்சங்கள் எம்ஜி விண்ட்ஸர் இவி-யில் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்தகைய காரையே இந்தியாவிற்காக மெடல் வாங்கி தரும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசாக வழங்க இருப்பதாக எம்ஜி அறிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி விண்ட்ஸர் இவி-யின் அறிமுகம் எப்போது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், இந்தப் புதிய கார் மாடலின் வருகை சந்தையில் எத்தகைய தாக்கத்தை மேற்கொள்ளும் என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இது அனைத்தையும் தெரிந்துக் கொள்ள நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








