குறைவான விலையில் வருகிறது மினி டொயோட்டா ஃபார்ச்சூனர்... இந்த வருஷமே சிங்கத்தை களமிறக்க போறாங்க...
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா (Toyota). இந்நிறுவனம் புதிய எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரின் மினி வெர்ஷனாக இருக்கும் என கருதப்படுகிறது. அதாவது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை (Price) மிகவும் அதிகம் என்பதால், அதை வாங்க முடியாதவர்களுக்கு, மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இந்த கார் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய டொயோட்டா கார், நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்படும் என கருதப்படுகிறது. அதை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் படிப்படியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
முதலில் தாய்லாந்து சந்தையில்தான் இந்த கார் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இந்தியாவிற்கும் இந்த கார் வரலாம். ஆனால் அது கொஞ்சம் சந்தேகம்தான். 2 வரிசை இருக்கை மற்றும் 3 வரிசை இருக்கை அமைப்புகளில், இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்களுடன், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இன்னும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை 33.43 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 51.44 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இது மிகவும் அதிகமான விலை என்பதால், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு மிகச்சிறந்த விலை குறைவான மாற்று தேர்வாக இந்த புதிய கார் இருக்கலாம். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், இந்த கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. ஏனெனில் இங்கு ஏற்கனவே எஸ்யூவி ரக கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' இருக்கிறது.
ஆனால் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாக்கப்படும் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








