மஹிந்திரா இ-வாகனங்களையும் பேட்டரிக்கு காசை கொடுக்காம வாங்கிக்கலாமா! எல்லார் வீட்டுலையும் இனி இ-வாகனம் ஓடபோகுது
மஹிந்திரா (Mahindra) நிறுவனமும் அதன் மின்சார வாகனங்களை பேட்டரிக்கான காசை வாங்காமல் விற்பனைச் செய்ய முன் வந்திருக்கின்றது. இந்த திட்டத்திற்கு 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) என்கிற பெயர் இந்தியாவில் உண்டு. நாட்டில் இந்த திட்டம் நீண்ட காலமாகவே செயல்பாட்டில் இருக்கின்றது. குறிப்பாக, இதை ஆரம்பத்தில் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் வழங்கி வந்தனர். ஆனால், இப்போது நான்கு மற்றும் பிற ரக வாகன உற்பத்தியாளர்களும் இந்த திட்டத்தை தங்களின் தயாரிப்புகளுக்கு கஸ்டமர்களை ஈர்க்கும் பொருட்டு வழங்கத் தொடங்கி இருக்கின்றனர்.
மிக முக்கியமாக இந்த திட்டத்தை எம்ஜி மோட்டார் (MG Motor)-ரே இந்தியாவில் டிரெண்டாக்கி விட்டது. இந்த நிறுவனம் சமீபத்தில் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் இந்த காரை எம்ஜி விற்பனைக்குக் களமிறக்கியது.

இதற்கேற்ப நல்ல ரெஸ்பான்ஸை அது இந்தியர்கள் மத்தியில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் இந்தியாவில் நம்பர் 1 செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருந்த டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV)-யையே இது பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. அந்த அளவிற்கே அது ரெஸ்பான்ஸை நாட்டில் பெறத் தொடங்கி இருக்கின்றது.
இது மாதிரியான வரவேற்பைப் பெற வேண்டும் என்கிற நோக்கிலேயே மற்ற நிறுவனங்களும் தங்களின் மின்சார வாகனங்களை பேட்டரி அஸ் எ சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வழங்க முன் வந்திருக்கின்றன. அந்தவகையிலேயே, மஹிந்திராவின் மற்றுமொரு பிரிவான மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி (Mahindra Last Mile Mobility Limited) நிறுவனமே தங்களின் தயாரிப்புகளை இந்த தனித்துவமான திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வழங்க முன் வந்திருக்கின்றது.
இதற்காக அந்நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. வித்யுத் (Vidyut), இதனுடனேயே எம்எல்எம்எம்எல் (MLMML) நிறுவனம் பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்திற்காக கை கோர்த்திருக்கின்றது. பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் ஓர் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கும்போது அந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கும் பேட்டரிக்கான தொகையை நாம் செலுத்த வேண்டாம்.
அதேவேளையில், அந்த பேட்டரி நாம் பயன்படுத்துவதற்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கிமீ என்கிற வீதத்தில் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. செலவு மற்றும் பராமரிப்பைப் பொருத்து அப்பேட்டரி பயன்பாட்டிற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். இத்தகைய திட்டத்தையே மஹிந்திரா லாஸ்ட் மொபைல் மொபிலிட்டி நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளுக்கு வழங்க முன் வந்திருக்கின்றது.
மஹிந்திரா நிறுவனத்தின் சிறிய லோடு மற்றும் வர்த்தக பயன்பாட்டு வாகன தயாரிப்பு பிரிவே இந்த எம்எல்எம்எம்எல் ஆகும். இதன்கீழ் 3 சக்கர பயணிகள் வாகனம், 3 சக்கர கார்கோ பயன்பாட்டு வாகனம், 4 சக்கர கார்கோ வாகனம் மற்றும் 4 சக்கர எலெக்ட்ரிக் லோடு வாகனம் என நான்கு பிரிவுகளில் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதில், மின்சார வாகனங்களுக்காகவே பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, ஸியோ (ZEO) 4 வீலர், ஜோர் கிராண்ட் (Zor Grand) மற்றும் ட்ரியோ பிளஸ் (Treo Plus) 3 சக்கர வாகனம் ஆகியவற்றிற்காகவே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், புதிய திட்டத்தின்கீழ் வாங்குகையில் கிமீ ஒவ்வொன்றிற்கும் 2 ரூபாய் 50 காசுகளை கட்டணமாக நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேட்டரிக்கான விலை குறைக்கப்பட்டு இருப்பதால் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டியின் மின்சார வாகனங்கள் மேலும் மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. எனவே வரும் நாட்களில் இந்த பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் இ-வாகனங்கள் மிகவும் அமோகமான விற்பனை வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








